ஊரான் வீட்டு கோழிய அறுத்து உம்மாட பேர்ல கத்தம் கொடுப்பவர்கள்!

ஹஸீர்-

க்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக இருந்தவரும்இ பிரபல அரசியல் விமர்சகருமான ஜயான் ஜெயதிலக ஊவா தேர்தல் முடிந்தவுடன் ஒரு சிங்களப் பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதித் தேர்தல் பற்றி குறிப்பிடும்போது பின்வருமாறு தெரிவித்திருந்தார்

"ரணில், ஊவாவைப் பொருத்தமட்டில் ஹரீனை விடவும் பலவீனமானவர். தேசிய ரீதியில் மஹிந்தவை விடவும் ஜனஹீனமானவர். ஆனால் மஹிந்த ஊவாவைப் பொருத்தமட்டில் சசீந்தரவை விட பலமானவர், தேசிய ரீதியில் ரணிலை விட ஜனரஞ்சகமானவர்". ரணிலின் அரசியல் நுட்பம், சாணக்கியம் என்பவற்றிற்கு இணையாக வேறு ஒருவரை நாம் இனங்காணுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனால் இன்றைய 'பொதுமக்கள் அரசியல்' என்பது சினிமாவைப் போன்றே சிறந்த நடிகனைப் புறந்தள்ளிவிட்டு, ஜனரஞ்சக நடிகனுக்குப் பின்னால் ஓடுபவர்களையே பெருமளவில் கொண்டிருக்கிறது.

மஹிந்தவின் வீழ்ச்சிக்கான போராட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டிய இந்தத் தருணத்தில், ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அல்ல) ஏனைய அனைத்து தரப்பினரையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவசர அவசரமாக ' ரணில்தான்' என்று ஒரு தலைப்பட்சமாய் முடிவெடுத்திருப்பது மீண்டும் மஹிந்தவை அரசு கட்டிலில் அமர்த்திவிடும் அபாயத்தை தோற்றுவித்திருக்கிறது .

நாங்கள்தான் வெல்பவர்கள், நிபந்தனைகள் இன்றி வந்து இணைந்து கொள்பவர்களுக்கு வாசல் திறந்திருக்கிறது என்கிற பிரதான எதிர்க்கட்சியின் தலைக்கனம் பிடித்த முன்னறிவித்தல் யானையே தன் தலையில் மட்டுமல்லாது, சிறுபான்மையினரின் தலையிலும் மண் அள்ளிப் போடுவதாக உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகர் ரணில்தான் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் அதிக அளவில் பெரிதுபடுத்தி பேசிக்கொண்டிருந்தபோது, ரணில் எதனையும் அலட்டிக்கொள்ளாது இருந்து வந்தார்.

அவரது மௌன விரதம் பெரோசா முஸம்மிலின் ஐக்கிய தேசிய கட்சியின் மாதர் அணி ஒன்றுகூடலின்போது கலைக்கப்பட்டிருக்கிறது. "மஹிந்தவை தோற்கடிக்கக்கூடிய ஒரு பொது அபேட்சகரை , அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடன் நிறுத்துவோம்" என்று சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாதர் அணி ஒன்றுகூடலில் ரணில் தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் குறித்து கருத்தரங்குகள் நடத்தப்பட்டும், தொலைக்காட்சி விவாதங்களில் சூடுபறந்துகொண்டுமிருக்கும், மக்கள் அபிப்பிராயம் அந்தக் கோரிக்கைக்கு பெருமளவில் ஆதரவாக இருக்கும் சூழலில் அவ்வாறு அதிகாரம் அற்ற ஜனாதிபதியாக வருவதைவிடவும், அதிகாரம்மிக்க பிரதமராகவரவே ரணில் விரும்புகிராறென்பது பொது அபேட்சகர் பற்றி இப்போது அவர் குறிப்பிட்டிருப்பதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது .

அடிக்கிற அலையோடு அலையாக அள்ளுப்பட்டு வெற்றி வாசலை அண்மித்துவிட்டதாக நினைத்து எதோ போதையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தடுமாறுகிறார்கள். போதை தலைக்கேறும்போது நிதானம் தவறிவிடுவது இயல்பு. ஆனாலும் கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்களான, பல வருட அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் ஞானிகள் இந்த 'ரணில்தான்' என்கிற தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது இருப்பதை பலரும் கவனிக்கத் தவறி உள்ளார்கள்.

அப்படி அவர்கள் மவுனமாக இருப்பது அவர்களின் கருத்துகள், இப்போது எழுந்துள்ள வெற்றி எதிபார்ப்பின் உந்துதலால் உருவாகிவரும் வேகத்தை தணித்துவிடக்கூடாது என்பதனாலேயாகும். இந்த 'ரணில்தான்' என்கிற கோஷத்திற்குப் பின்னால் வேறு ஒரு அரசியல் இருப்பதை ஐ.தே.க ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளாது உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் பச்சைச்சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்த பெரும் ஜன வெள்ளத்துடனான பொதுக்கூட்டம் ஒன்றில் "ரணில் விக்ரமசிங்ஹதான் அடுத்த ஜனாதிபதி, அந்த ஆசனத்தில் அவரை அமர்த்த என் பலத்தையும், வேகத்தையும் மற்றும் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்துவேன்" என்று சஜித் பிரேமதாச சத்தியம்செய்து ஆக்ரோஷமாக பேசியது ஐக்கிய தேசிய கட்சிஆதரவாளர்களை மேலும் உசுப்பேற்றிவிட்டிருக்கிறது. 

இனி எல்லாம் சரி சஜித், ரணிலை வெற்றிபெறச்செய்து ஐக்கிய தேசிய கட்சி யுகத்தை கொண்டுவந்துவிடுவார் என்று கனவுகாண தொடங்கியுள்ளார்கள். ரணிலுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருந்த சஜித், ஊவா தேர்தல் மேடையொன்றில் சமரசம் செய்துகொண்டாலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் அதன் தலைமைப்பதவிக்கான பனிப்போர் இன்னும் உமி நெருப்பாக உள்ளுக்குளேயே புகைந்துகொண்டுதான் இருக்கிறது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தல் ரணிலின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாகும். இதில் ரணில் தோற்றுப்போனால் எழும் சுனாமிக்குள் அள்ளுண்டு அழிவதைத்தவிர அவருக்கு வேறு வழியிருக்காது. அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, ஆளும் கட்சியில் இருந்தும் சில பெருந்தலைகளை பிடுங்கி எடுத்துக்கொண்டும் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி காணுவதன் மூலம் பலம் பொருந்திய பிரதமராக ரணில் உருவாவதுடன், சஜித்தின் பிரதமர் கனவைத் தகர்த்து அதன் பிறகு மெது மெதுவாக அவரின் தலைவராகும் எதிர்காலக் கனவை சூனியமாக்கவும் காய் நகர்த்தல்களை செய்யக்கூடிய சாணக்கியம், அரசியல் சதுரங்க விளையாட்டில் சாமார்த்தியம் மிக்க ரணிலுக்கு சாத்தியமாகாததொன்றல்ல . 

சர்வாதிகாரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற குரல் இப்போது கோஷமாகி உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கும் காலக்கட்டத்தில் அதனை மையப்படுத்தியதாகவே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப்போகிறது. எனவே ஐ.தே.க விலிருந்து தெரிவாகிற புதிய ஜனாதிபதி மூக்கணாங்கயிறு போடப்பட்டவராகவே இருப்பார். அந்தக் கயிற்றின் முனைகள் பாராளுமன்ற பலத்தினை கையில் வைத்திருக்கும் பிரதமரின் பிடியிலேயே இருக்கப்போகிறது .

ரணிலை ஜனாதிபதியாக்கியே தீருவது என்கிற சஜித்தின் போர் முழக்கத்திற்குள் இந்த கையிற்றை கையில் எடுக்கும் தந்திரம் ஒழிந்திருக்கலாம். எனவே 'பொதுவேட்பாளர் அல்ல, ரணிலே வேட்பாளர்' என்கிற பிரகடனத்தை அவசர அவசரமாக சஜித், ஐ.தேக வின் இளையோர் அணி என்கிற அவரின் சகாக்களுடன் சேர்ந்து முன்னெடுக்கிறார் போலத்தெரிகிறது. ரணிலின் தலைமைப் பதவியை பறிக்க பல வேலைத்திட்டங்கள் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டும் இ பிரதான ஊடகங்கள் வெளிப்படையாகவே போர்முழக்கம் செய்தும் கவிழ்க்கமுடியாது போனதில் இருந்து பல பாடங்களை கற்றுள்ள சஜித் அவரின் சகாக்களுடன் சேர்ந்து பொது வேட்பாளராக ஒருவர் வருவதை தடுத்தே தீருவது என்கிற முடிவில் உறுதியாக இருப்பது இவ்வாறான ஒரு சந்தேகத்திற்கு வித்திடுவது தவிர்க்க முடியாததாகிறது.

மற்றைய கட்சிகள் எங்களுடன் சேரலாம், ஆனால் நிபந்தனைகள் அற்று, பொதிகள் எதுவும் இல்லாது வெறுங்கையுடன் வந்து வெற்றிக்கு உழையுங்கள் ' என்று சஜித்இ ஹரின் மற்றும் அவரின் சகாக்கள் விதிக்கிற நிபந்தனைகுப் பின்னால், மற்றைய கட்சிகள் ஐ.தே.கவுடன் கூட்டுச்சேர்வதை தவிர்ப்பதன் மூலம் ரணிலை தோல்வியடையச் செய்து, தலைமைப்பொறுப்பை கைப்பற்றும் தந்திரமும் இருக்கலாம் .

'ரணில் வென்றால் பிரதமர் பதவி ,ரணில் தோற்றால் தலைமைப் பதவி' என்பதை கனவுகாணுகிற சஜித் பிரேமதாச 'வெற்றியிலும் வெற்றி, தோல்வியிலும் வெற்றி' என்கிற வியூகத்தில் செயற்படுவதாகவே தோன்றுகிறது.

மொத்தத்தில் பொது வேட்பாளரை ஒதுக்கி, ஜே.வீ.பீ, முஸ்லிம் காங்கிராஸ், உட்பட மற்றைய கட்சிகளை புறந்தள்ளி வைத்து ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைக்கும், அதன் தலைவர் ரணில்தான் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்று ஒருதலைப்பட்சமாக அறிவிக்கும் இவர்கள், ஒட்டு மொத்த இலங்கையினரதும் ஆட்சிமாற்றத்திற்கான கனவில் மண் அள்ளிப் போட்டுவிட்டு, அடுத்த வீட்டு கோழிய அறுத்து  உம்மாட பேர்ல கத்தம் கொடுப்பவர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :