இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பணிப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அமைச்சர் விமல் வீரவங்ஸ ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'ரவூப் ஹக்கீம் பகுத்தறிவுள்ளவரெனில் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார்' எனும் தலைப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான விமல் வீரவங்ச அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.'
'ஹக்கீம் பகுத்தறிவுள்ளவரெனில் என்று தொடங்கிப் பேசியிருக்கின்ற இந்த வார்த்தைப் பிரயோகங்களானது, அமைச்சர் விமல் வீரவங்ஸ இன்னமும் தன்னை ஓர் போக்கணங்கெட்ட அரசியல் வாதியாகவே அடையாளப்படுத்தி வருகின்றார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.'
'ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நெருங்கிக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் சிறுபான்மை மக்கள் பற்றிய துவேசத்தைக் கிளப்பும் வகையில் கருத்துக்களை வெளியிடும் தரமற்ற அரசியல்வாதிகளின் வரிசையில் வீரவங்ஸ அவர்களும் நின்று விளையாட எத்தனிப்பது அண்மைக்காலமாக பலராலும் அவதானிக்கப்பட்டே வருகின்றது.'
'அவரை விட அறிவாற்றலிலும், கல்வித் தகைமையிலும், அரசியல் முதிர்ச்சியிலும் மேம்பட்டவராக மதிக்கப்படுகின்ற நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்கமாகப் புத்தி சொல்வதற்கான எந்தத் தகைமையும் விமல் வீரவன்ஸவுக்குக் கிடையாது என்பதை மிக ஆணித்தரமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். இவ்வாறான எத்தனிப்புக்களிலிருந்து அவர் எதிர்காலத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.'
'அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ.ல.மு காங்கிரஸானது பல நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், பல உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், எத்தகைய சிக்கல் நிறைந்த பிரச்சினைகளையும் உரிய முறையில் விவாதித்து சரியான முடிவுகளை எட்டும் தரமான உச்சபீட உறுப்பினர்கள் சபையையும் கொண்டு மிகச் சிறப்பாக இயங்கு நிலை கொண்டுள்ள ஓர் தேசிய அரசியல் கட்சியாகும். எனவே, அதன் தேசியத் தலைவராகவும், இந்த நாட்டின் கௌரவ நீதி அமைச்சராகவும் இருந்து வருகின்ற அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் புத்தி சொல்லும் அளவுக்கு எந்தவிதமான தகைமையையோ, அருகதையோ திரு. விமல் வீரவன்ஸ அவர்களுக்குக் கிடையாது என்பதையும் இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
'தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்ற சரிவுகளையும், நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும், நிவாரணங்களையும் பற்றி அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய அமைச்சர் விமல் வீரவங்ஸ அவர்கள், அவ்வாறான விடயங்களை விட்டு விட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பகுத்தறிவு இருக்கிறதா? இல்லையா? எனப் பரிசோதிக்க முற்பட்டிருப்பதைப் பார்க்கின்றபோது 'போக்கணம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்' என்ற தமிழ்ப் பழமொழியே தமக்கு ஞாபகம் வருகின்றது' என்றும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment