ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலில் 140 கிலோகிராம் எடை கொண்ட சங்கிலி கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘சிஐஏ’வின் முன்னாள் இயக்குனரும், லியோன் பனேடா, சமீபத்தில் அமெரிக்க போர்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
அதில், அல் தைா இயக்கத்தின் தலைவர் பின்லேடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு அவரது உடல் கடலில் வீசப்பட்டது என்பதை விவரித்துள்ளார்.
“சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ஒசாமாவின் உடல் கார்ல் வில்சன் போர்க் கப்பலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் வெள்ளைத் துணியால் மறைக்கப்பட்டு, அரேபிய மொழியில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, ஒரு கனமான பைக்குள் உடல் வைக்கப்பட்டது.
உடல் ஒழுங்காக மூழ்க வேண்டும் என்று 140 கிலோகிராம் எடையிலான சங்கிலியும் அந்த பையோடு இணைக்கப்பட்டது. ஒரு மேசையில் உடல் வைக்கப்பட்டு, அந்த மேசை கப்பலின் மேலடுக்கில் தடுப்புகளுக்கு பக்கத்தில் வைக்கப்படது. மேசையை சாய்த்து உடலை கடலில் தள்ளும்போது, இருந்த எடையில் அந்த மேசையும் கடலுக்குள் விழுந்துவிட்டது. உடல் மூழ்கிய பிறகு மேசை கடல் பரப்பில் மேலே மிதந்தது” என்று லியோன் விவரித்துள்ளார்.
பின்லேடனின் உடல் எந்தக் கடலில், எந்தக் குறிப்பிட்ட இடத்தில் மூழ்கடிக்கப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment