கல்முனைக்குடி சாஹிபு வீதியின் காபட் இடும் வேலைகள் பாராளுமன்ற உறுப்பினரும்,கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனைக்குடி சாஹிபு வீதியை காபட் வீதியாக மாற்றும் வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், கொந்தராத்துக்காரர் வேலைகளை இடைநிறுத்தியதால் காபட் இடும் வேலைகள் பூர்த்தியடையாமல்இருந்து வந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இடைநிறுத்தப்பட்ட வேலைகளை புதிய கொந்தராத்துக்காரருக்கு பாரப்படுத்தப்பட்டதுடன் காபட் இடும் இறுதிக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் கே.ஏ.தௌபீக் தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் காபட் வீதிகளாக புணரமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்அனுமதி பெற்றிருந்த நிலையில் முதற்கட்டமாக சாஹிபு வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, இவ்வீதியின் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சிலர் மக்களிடம் சென்று பிழையான தகவல்களை வழங்குவதோடு ஊடக அறிக்கைகளையும் விடுகின்றனர். மற்றவர்கள் செய்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நோண்டிப் பார்ப்பதிலேயே சிலருக்கு காங்கள் கழிகின்றது.
தங்களால் முடிந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதற்கு குறிப்பிட்ட நபர்கள் முன்வரவேண்டும். மாறாக மீண்டும் மீண்டும் பொறாமையோடு மூக்கை நுளைப்பதற்கு எத்தனிக்கக்கூடாது.

0 comments :
Post a Comment