முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்காமல் போனமைக்கான பாவத்தை செய்தவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமே ஆவார். எனவே, இன்று அது தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிப்பதால் பலனில்லையென ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல நேற்று சபையில் தெரிவித்தார்.
18ஆவது திருத்தம் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை
விசேட வழக்குத் தொடுநர் எனப்படும் பதவியொன்றை உருவாக்குதல் தொடர்பாக ஐ.தே.கட்சி எம்.பி ரவி கருணாநாயக முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அளுத்கமை பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை என்றும் எனவே முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்காமைக்கான முழுப்பொறுப்பையும் அமைச்சர் ரவூப் ஹக்கீமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
17ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி உட்பட சபையில் 224 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் நீதித்துறை பொலிஸ் அரச சேவைகள் என அனைத்திற்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில் நீதித்துறையில் சுயாதீனம் காணப்பட்டது. ஆனால் இந்த 17ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்து 18ஆவது திருத்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமே ஆதரவு வழங்கினார்.
இதனால் இன்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இராணுவத் தளபதி உட்பட அரச உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியே நியமனங்களை வழங்கும் நிலைமை உருவானது.
ஆனால் 17ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்த போது இவ்வாறான அரச உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியினால் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் அதனை நிராகரிக்கவும் வேறொருவரின் பெயரை பரிந்துரைக்கவுமான அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு இருந்தது. ஆனால் 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதோடு இந்நிலை மாறி அனைத்தும் ஜனாதிபதியின் கைகளில் சிக்கிக்கொண்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை என அமைச்சர் ஹக்கீம் சொல்வதால் எந்தப்பயனும் இல்லை. ஏனென்றால் முஸ்லிம்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்ட பாவத்தை செய்தவர் ஹக்கீமே ஆகும்.
இந்தப்பாவம் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல அனைத்து நாட்டு மக்களையும் நெருக்கடியில் தள்ளி விட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணையில் சாட்சியமளித்தால் விபரீதங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சரொருவரே அச்சுறுத்துகின்றார்.
அவ்வாறானதோர் நிலையில் சாட்சியாளர்களை பாதுகாப்போம். அதற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றுவோம் என்ற அரசின் உறுதிமொழிகளை எவ்வாறு நம்ப முடியும் என்றும் லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.

0 comments :
Post a Comment