தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுய விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக சர்வதேசத்தினை பயன்படுத்துவது நாட்டிற்கு பாதகமாக அமையும். அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியாவின் தலையீடு அவசியமற்றது எனத் தெரிவிக்கும் ஜே.வி.பி. இலங்கை விடயத்தில் நரேந்திரமோடி இரட்டை வேடம் போடுகின்றார் எனவும் குற்றம் சுமத்தியது.
13 க்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்திய பிரதமர் இலங்கையை வலியுறுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
மாகாண சபை அதிகாரங்கள் அதற்கு அப்பாற் சென்ற அதிகாரங்கள் அனைத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத்தான் தேவையே தவிர தமிழ் மக்களின் தேவை இதுவல்ல.
வடக்கில் தமிழ் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். பொருளாதார ரீதியில் சிக்கல்கள் உள்ளது. இவை அனைத்தையும் விடுத்து மாகாண சபை அதிகாரங்களை கேட்டு நிற்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுயநலத் தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.
யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து இன்று வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடடிற்குள் சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்தவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.
சர்வதேசத்தினை நம்பி செயற்படுவதை விடவும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்த முடிவும் அரசாங்கமும் தமிழர் விடயத்தில் அக்கறையில்லாது செயற்படுகின்றது. கூட்டமைப்பும் தமிழர் விடயத்தில் சுயநலமாக செயற்படுகின்றனர். இவ்வாறு இரு தரப்பினரும் முரண்பாட்டால் ஒருபோதும் இணக்கப்பாட்டினை எட்ட முடியாது. எனினும் இவற்றினை மாற்றியமைக்க நாட்டிற்குள்ளேயே பல வழிமுறைகள் உள்ளன. அவற்றினை கையாள முடியும். அதை விடுத்து இந்தியாவையும் சர்வதேசத்தினையும் நம்பி செயற்படுவதால் தமிழ் மக்கள் விடயத்தில் புதிதாக எவையும் இடம்பெற்று விடப்போவதில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுய இலாபங்களுக்காகவும் சுயநல அரசியலை மேற்கொள்வதற்காகவும் சர்வதேசத்தினை பலப்படுத்திக் கொள்வது இறுதியில் நாட்டிற்கும் மூவின மக்களுக்குமே பாதகமாக அமையும்.
இலங்கை விடயத்தில் எவரது தலையீட்டிற்கும் இடமளிக்கக் கூடாது. அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது. மூவின மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையில் நாட்டில் அதிகாரப் பகிர்வொன்றினை ஏற்படுத்த வேண்டுமே தவிர கூட்டமைப்பின் தேவைக்கேற்ற அதிகாரப் பகிர்வு அவசியமற்றது. அதேபோல் கூட்டமைப்பின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப்பகிர்வினை ஏற்படுத்த இந்தியா தலையிடுவதும் அவசியமற்றது.
மேலும் இலங்கை விடயத்தில் இந்தியா நாடகமாடுகின்றது. அரசாங்கத்தினை ஆதரித்து சர்வதேசத்திடமிருந்து இலங்கையை சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றுவதாக கூறி இலங்கையின் வளங்களை சுரண்டுகின்றது. மறு பக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வடக்கில் பிரிவினைவாத போராட்டம் ஒன்றினை ஏற்படுத்தும் உதவிகளை செய்து கொடுக்கின்றது.
மொத்தத்தில் இலங்கையில் சமாதான சூழல் ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கம் இந்தியாவிற்கு இல்லை. இலங்கை விடயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை நாடகம் ஆடுகின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment