எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் மக்களுக்கு சேவை முன்னெடுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்

தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (19) தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இடம்பெற்ற வடமாகாண ஆங்கில ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மாகாணசபை என்பது எனது நீண்டகாலக் கனவாக இருந்த போதிலும், அது எமது கைகளுக்குக் கிடைக்காமல் போனவை துரதிஷ்டவசமாகும். வடமாகாணசபை எமது கைகளுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பின், மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் வடமாகாணத்தை செல்வம் கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைத்திருக்க முடிந்திருக்கும். 

வட மாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறியை ஜனாதிபதி மீண்டும் சேவை நீடிப்புச் செய்துள்ள நிலையில், அவரைக் கொண்டு வட மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நான் திட்டவட்டமாக நம்புகின்றேன். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை நடைமுறைச்சாத்தியமான வழியிலோ அல்லது நியாயமான வழியிலோ தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையில், நாம் நடைமுறைச்சாத்தியமான நியாயமான வழிமுறைகளின் ஊடாகவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். 

இந்நிலையில் தேர்தல் காலங்களில் நிறைவேற்ற முடியாத, யதார்த்தமில்லாத மக்களை உசுப்பேற்றும் அரசியலை முன்னெடுத்து, மக்களிடம் வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒருபோதும் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாது.

எனவே, எதிர்காலங்களில் உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து மக்களுக்காக மக்களுடன் நின்று பணி செய்பவர்களுக்கு மக்கள் தமது ஆதரவை முழுமையாகத் தருகின்ற பட்சத்தில், பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாணப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாகக் கடமையாற்றும் ஆசிரிய மாணவர்கள் தமது இரண்டு வருடகால பாடநெறிகளைப் பூர்த்தி செய்யும் முகமாக மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்ல வேண்டியதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி கையொப்பம் இடப்பட வேண்டுமெனக் கல்வியமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை இடைநிறுத்தி வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் சர்வதேசப் பொறுப்பாளர் மித்திரன், இரா.செல்வவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :