இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக நேரடியாகக் கருத்து வெளியிட மறுத்த சல்மான் குர்ஷித், "இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகவும் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாகவும் எனது இலங்கைப் பயணத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வேன்' என்று தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் சல்மான் குர்ஷித் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கொமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது. கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்பது பிரதமரின் முடிவு. அது மத்திய அரசின் முடிவாகும். ஆனால், சில அலுவல் காரணமாக பிரதமரால் இலங்கை செல்ல இயலவில்லை. அதனால், இந்தியக் குழுவுக்கு நான் தலைமை ஏற்று புதன்கிழமை கொழும்பு செல்கிறேன்.
கொமன்வெல்த் நாடுகளின் கூட்டம் என்பது பல நாடுகள் தொடர்புடைய பிரச்சினை. அது இந்தியா-இலங்கை விவகாரத்துக்கான கூட்டம் கிடையாது. எனவே, இக் கூட்டத்தில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகவும் கொமன்வெல்த் நாடுகளுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளவும் நான் எனது கொழும்பு பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வேன். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்திக்கும் போது தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவேன். சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கவும் கேட்டுக் கொள்வேன்' என்றார் சல்மான் குர்ஷித்.
0 comments :
Post a Comment