அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தும் விவகாரத்துக்கு தீர்வுகாணும் சிறந்த மேடையாக பாராளுமன்றமே காணப்படுகின்றது.
எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து கலந்துரையாடி மக்களுக்குத் தேவையான தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கவேணடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான அபிவிருத்தி மூலோபாய நோக்கங்களின் அடிப்படையிலான பல்வேறு பரஸ்பர நலன்கள் குறித்த விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.
சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பல தசாப்தங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் தனது பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலானது சமூகத்துக்கான ஒரு முக்கியமான கட்டம் என்றும் வட மாகாண சபைத் தேர்தலை முக்கியமான வரலாற்று நிகழ்வாக பார்ப்பதாகவும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தும் விவகாரத்துக்கு தீர்வுகாணும் சிறந்த மேடையாக பாராளுமன்றமே காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாடி இந்த விடயம் குறித்து மக்களுக்குத் தேவையான தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment