அரசின் மிருகத்தனம் தற்போது தெளிவாக புலப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
வெலிவேரியவில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் என்று கூட பார்க்காது இராணுவத்தினர் அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துப்பாக்கி குண்டுகள் மூலமும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் மூலமுமே பதிலளிப்பதாக அவர் இதன்போது கூறினார்.
ரத்துபஸ்வல மக்கள் குடிக்க தண்ணீர் கேட்டே வீதிக்கு வந்தனர். எனினும் அந்த சந்தர்ப்பத்தின்போது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் முன்றாம் நான்காம் தரப்பு பற்றி பேசுவதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மிலேட்சைத்தனம், இயலாமை இதன் மூலமாக வெளிப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
எவ்வாறாயினும் நாட்டிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டியவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரே எனவும், இச்சம்பவத்தின் மூலமாக அவர்களின் இயலாமை வெளிப்படுவதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
வெரிவேலிய சம்பவம் குறித்து ஆராய்வதற்கு அரசு கட்டாயமாக குழு ஒன்றை அமைக்கும் எனவும் இக்குழு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ரத்துபஸ்வல மக்களுக்கும் எந்தவித நம்பிக்கையும் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியாக பதில் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment