மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு நகர் வடக்கு நுழைவாயிலில், பிள்ளையாரடிச் சந்தியில் புத்தர் சிலை வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் உள்ளுர் மக்களும் இணைந்து, ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பிள்ளையாரடி ஸ்ரீபுலவி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று காலை ஒன்று கூடிய பெண்கள் மற்றும் மதகுருமார் உட்பட உள்ளுர் மக்கள் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் இதற்கான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் வாசக அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பிள்ளையாரடிச் சந்தி வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்றையும் நடத்தினார்கள்.
பௌத்த மக்கள் வசிக்காத இடமொன்றில் புத்தர் சிலை வைக்க முற்படுவது இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் முறுகலை ஏற்படுத்தும் செயல் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அங்கு காணப்பட்ட வாசக அட்டைகளில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்ட முடிவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ள்ஸை நேரில் சந்தித்து இதனை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர்.
பின்னர் இராணுவ கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுதத் திலகரட்ணவையும் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக உரையாடினார்கள்.
ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரிகேடியர், குறித்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படமாட்டாது என்று உறுதி மொழி வழங்கியதாகவும் இதனையடுத்து ஆர்பாட்ட பேரணி அமைதியாக கலைந்து சென்றதாகவும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன. செல்வராசா தெரிவித்தார்.BBC
0 comments :
Post a Comment