
இவ்வருடத்திற்கான ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களாக நானும் அமைச்சர் எ.எச்.எம்.பெளஸியும் நியமிக்கப்பட்டிருக்கையில் பெளஸி ஹஜ் குழுவைக் கலந்தாலோசிக்காது சவூதி ஹஜ் அமைச்சருடன் 2800 ஹஜ் கோட்டாவுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தவறானதாகும் என ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல்காதர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் சகோதர இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில், ‘ஹஜ் ஏற்பாடுகளை கலந்துபேசி முன்னெடுப்பதற்காகவே ஹஜ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவினை கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது இணைத் தலைவர்களாக இருவர் நியமிக்கப்பட்டிருக்கும் போது ஒருவர் தனித்து செயற்பட முடியாது. ஹஜ் ஏற்பாடுகள் ஹஜ் குழுவின் மசூராவின் படியே முன்னெடுக்கப்படவேண்டும். கடந்த வருடம் போன்று தனித்து செயற்பட முடியாது என்றார்.
இதேவேளை ஹஜ் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியைத் தொடர்பு கொண்டு கருத்து வினவியபோது,‘ஒப்பந்தத்தில் அமைச்சர்களே கையொப்பமிடவேண்டும். இதன்படியே சவூதி ஹஜ் அமைச்சரும் அமைச்சரான நானும் ஹஜ் கோட்டா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம் என்றார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் குழுவில் சிரேஷ்ட அமைச்சர் ஞ.எச்.எம்.பெளஸி, பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் இருவரும் இணைத்தலைவர்களாகவும் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் டாக்டர் இக்பால் இருவரும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி சவூதி ஹஜ் அமைச்சருடன் இலங்கைக்கான ஹஜ் கோட்டா 2800 ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு திரும்பி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment