(இப்னு நஸீர்)
30 வருட கால யுத்தத்தினால் சேதமடைந்த கிழக்கு பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் 2013 தேசத்துக்குமகுடம் கண்காட்சி இம்முறை அம்பாறையில் நடைபெற்று வருகின்றது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் இதற்கு அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் இதனை புறக்கணித்துள்ளார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையில் இக்கண்காட்சியை பார்வையிடுவதற்காக மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் காத்துக்கொண்டிருந்தவர்களுள் முஸ்லிம் மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கடந்த வருடங்களில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சிகளை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் மிகுந்த ஆவலுடன் சென்று பார்வையிட்டு வந்ததை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.
இந்த தேசத்தில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு விசுவாசமாகவும் ஏனையசகோதரர்களுடன் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்ற அதேவேளை தேசத்தை கட்டி யெழுப்பும் பணிக்கும் பாரிய பங்காற்றியும் வருகின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
என்றாலும், அன்மைக்காலமாக இந்த உறவுக்கு வேட்டு வைத்தாற்போல் அசாதாரண சூழ்நிலையொன்று தீயசக்திகளால் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் யாவரும் அறிவோம்.
முஸ்லிம்கள் மாத்திரமல்ல; இந்த முழு நாட்டு மக்களுமே மனித நேயத்துடனும் இன ஐக்கியத்துடனும் வாழவிரும்புகின்றனர். இருப்பினும் ஒரு சில தீய சக்திகளின் விஷமப்பிரச்சாரங்கள் இனங்களுக்கிடையிலான சகவாழ்வுக்கும் புரிந்துணர்வுக்கும் பாதிப்பாக அமைந்துவிடுகின்றமை கவளைக்குரியதாகும்.
இவ்வாறான அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் மிக அவதானமாகவும்விழிப்புணர்வோடும் முன்னெச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கின்றது, காரணம் தீய சக்திகள் தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதுவே தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு முஸ்லிம் மக்கள் செல்லாமல் இருப்பதன் மிகப்பிரதானமான காரணமாகும். (எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் எதுவும் நடக்கலாம் என அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காலகட்டம்.முஸ்லிம்களுக்கோ அல்லது ஷரீஆவுடன் சம்மந்தப்பட்ட விடயங்களுக்கோ எந்தவொரு தீய செயற்பாடுகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையாகவும் செயற்படுகின்றார்கள் எனக்கூறலாம்.)
இதுபோக, இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதாவது தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்திற்கு சென்ற முஸ்லிம் சகோதரகள் சிலர் எதிர்கொண்ட ஒருவிடயம் தான், கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற சிற்றுண்டிச்சாலைகளில் எந்தவொரு சிற்றுண்டிச்சலைகளும் முஸ்லிம்களுக்கு பொருத்தமானதாக அமையவில்லை.
அனைத்து சிற்றுண்டிச்சாலைகளும் சிங்கள சகோதரர்களின் சிற்றுண்டிச்சாலைகளாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது,இதனால் இவர்கள் (முஸ்லிம்கள்) பாரிய சிரமத்தை முகங்கொடுத்துள்ளனர். இந்த விடயம் காட்டுத்தீ போல் முஸ்லிம் மக்களிடையே பரவியது. அண்மையில் ஏற்பட்ட ஹராம் ஹலால் பிரச்சினையால் முஸ்லிம் மக்கள் இந்த விடயத்திலும் மிகவும் அவதானமாக இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தேசத்துக்கு மகுட கண்காட்சிக்கு அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் இதனை புறக்கணித்துள்ளார்கள் எனவும் கூறுவது பொருத்தமாக அமையாது. நாம் எதிர் நோக்கியுள்ள இன்றைய சூழலில் இது போன்ற கருத்துக்களை பரப்பாமல் இருப்பதுதான் சிறந்த வழியாகும். காரணம் இது போன்ற கருத்துக்கள் கூட தீய சக்திகளை இன்னும் இன்னும் தூண்டுகின்ற விடயமாகவும் அமையலாம்.

0 comments :
Post a Comment