ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்கபொதுக் கூட்டமொன்றில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டு இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் மகோன்னத அரசியல் தலைவராகத் திகழ்ந்த அன்னாரை அவமதிக்கும் செயலென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது
எந்தவித அடிப்படையோ ஆதாரமோ அற்ற பொய்களையும், அவதூறுகளையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவ்வாறான பொய்களையும் பரப்பி,
அவர்களை தவறாக வழிநடாத்த எத்தனிப்பதை பொதுபல சேனா என்ற அமைப்பு கைவிட வேண்டும் என்றும்; அவர் விசனம் தெரிவித்தார்.
பிரஸ்தாப அமைப்பினர், குறிப்பாக அதன் செயலாளர் அண்மைக் காலமாக இஸ்லாத்தின் மீதும், இலங்கை முஸ்லிம்கள் மீதும் வீணான பழிகளையும், அபாண்டங்களையும் பகிரங்கமாகச் சுமத்தி வருவது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
எமது மறைந்த தலைவர், முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நன்கு மதிக்கப்படுபவர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த காலகட்டத்தில், முஸ்லிம் இளைஞர்களும் அவ்வாறு ஆயுதம் ஏந்தக் கூடிய இக்கட்டான சூழ்நிலை உருவாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுது, அவர்களை அதிலிருந்து திசை திருப்பி உரிமைகளை ஜனநாயக ரீதியாக பெறுவதற்கு வாய்ப்பாக அவர் உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment