கிழக்கு மாகாண சபைத்தீர்மாணங்கள்.ஒரே பார்வையில்.


சென்ற 24.12.2012 ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாகாண சபையின் அமைச்சரவையின் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார்.
அத்தீர்மானங்கள் விபரங்கள்; பின்வருமாறு
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக நியதிச் சட்டம் 
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக நியதிச் சட்டம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக நியதிச் சட்டத்தினை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கியது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவு
கிழக்கு மாகாண சபை அமர்வுகளுக்கு சமூகம் தரும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு 5000 ரூபாவும், மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கு 7000 ரூபாவும், அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கு 9000 ரூபாவும் விசேட கொடுப்பனவாக வழங்குவதற்கு அனுமதியை வழங்கியது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிவாரணம் வழங்கல்
கிழக்கு மாகாணத்தில் 03 மாவட்டங்களால் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்; பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண சபையின் சார்பில் அவசர உதவிகள் வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களினால் சமாப்;பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனர் நிர்மாணம் மற்றும் நிவாரணங்கள் வழங்குகின்ற பணிகளை அனர்த்த நிவாரண அமைச்சூடாக துரிதப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அனுமதி வழங்கியது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கல் 
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் சிறிதளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கிழக்கு மாகாண சபை விசேட நிதித் திட்டத்தின் கீழ் 20000 ரூபா பணம் நஷ்டஈடாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகள், உள்ளுராட்சி திணைக்களத்திற்குச் சொந்தமான வீதிகள், மாகாண நீர்ப்பாசனத் திட்டங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், விவசாய திட்டங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து கிழக்கு மாகாண சபையின் விசேட நிதி ஒதுக்கீட்டு மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் புனர் நிர்மாணம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் வழங்குதல் 
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமை தொடர்ந்து நீடிக்குமானால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 03 மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாண சபையூடாக விசேட நிதிகளை ஒதுக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் வழங்குவதற்காக தீர்மானிக்கப்ட்டது.
மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களை நடாத்துதல்
கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்கள் தோறும் மாகாண சபை நடவடிக்கைகள், மாவட்டங்களின் அபிவிருத்திப் பணிகள் சம்பந்தமான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் 04 மாதங்களுக்கு ஒரு முறை நடாத்துவதற்கும், மாவட்டங்கள் தோறும் நடைபெறும் இக் கூட்டங்களில் அந்தந்த மாவட்டத்தின் மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து இக் கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை 2013 ம் ஆண்டில் இருந்து இக் கூட்டங்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
வரவு செலவுத் திட்ட விவாவதங்கள் நடைபெறும் நாட்களை அதிகரித்தல் 
கிழக்கு மாகாண சபையில் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறுகின்ற போது மாகாண சபையின் அமைச்சுக்களின் செயற்பாடுகளை ஜனநாயக ரீதியாக சாதக, பாதகமான கருத்துக்களை முன்வைப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான நேர ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளதுடன் மாகாண சபை உறுப்பினர்கள் முன் வைக்கின்ற விடயங்கள் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு மாகாண சபை அமைச்சர்களுக்கும் நேரங்கள் போதாமல் உள்ளது.
எனவே எதிர்வரும் 2014 ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாண சபையில் சமர்பிக்கப்படுகின்ற போது 05 அமைச்சுக்களுக்கும் 05 தினங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்ததை ஆராய்ந்த அமைச்சரவை 2014 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதங்களை 05 நாட்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆயுர்வேத வைத்தியர்கள் வெற்றிடங்களை நிரப்புதல்
கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தில் 22 வைத்தியர்கள் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஆயுர்வேத வைத்தியத் துறையில் நம்பிக்கை கொண்டு தமது நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுவரும் கிழக்கு மாகாண மக்களுக்கு பூரணமான சேவையினை வழங்க முடியாமல் உள்ளது.
எனவே ஆயுர்வேத திணைக்களத்தில் வெற்றிடமாக உள்ள 22 வைத்தியர்களது வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியினை கிழக்கு மாகாண அமைச்சரவை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை இதனை ஏற்றுக்கொண்டு இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கியது.
திருமலை, மட்டு, அம்பாறை மாவட்டங்களில் வரவேற்புத் தூண்கள் அமைத்தல்
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையில் எண்நிறைந்த உள்ளாசப் பயணிகள் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருகின்றனர் இவர்களை வரவேற்கும் விதத்திலான வசனங்களை தாங்கிய பொருத்தமான வரவேற்பு தூண்களை 03 மாவட்டங்களில் முக்கிய இடங்களில் கிழக்கு மாகாண சபை சார்பாக அமைப்பதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை வரவேற்பு தூண்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியது.
அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தை மறைக்காமல் சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைத்தல்
நெல்சிப் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடத் தொகுதியை கட்டமைப்பதற்கான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக் குழுவின் 09 பணிந்துரைகளை புறக்கணித்து விட்டு அட்டாளைச்சேனை ஜூம் ஆப் பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தை மறைக்கக் கூடிய வகையில் தற்போது இச்சந்தைக் கட்டிடத் தொகுதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னாள் முதலமைச்சர் திரு.சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் முன்னாள் விவசாய அமைச்சர் டாக்டர் துரையப்பா நவரத்ணராஜா அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக் குழுவின் 09 பணிந்துரைகளுக்கு ஏற்ப அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடத் தொகுதிகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு. சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக் குழுவின் 09 நிபந்தனைகளுக்கு அமைய அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தை மறைக்காமல் அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளருக்கும், கிழக்கு மாகாண நெல்சிப் திட்டத்தின் மாகாணப் பணிப்பாளருக்கும் அமைச்சரவை பணிப்புரை வழங்கியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :