மருதமுனை மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மையில் சின்னத்தில் ஏழாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான வை.கே.றகுமானை ஆதரித்து மருதமுனையில் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்வு (23) இரவு மருதமுனை அல்-மனார் வீதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,
மருதமுனை மக்கள் அயல் கிராமங்களில் உள்ள வேட்பாளர்களையே காலம் காலமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வருகின்றீர்கள் ஆனால் இங்கு எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. இதனை இளைஞர்கள் முகப்புத்தகங்களில் எழுதிவருகின்றனர். இன்னிலையில் இந்த பாராளுமன்ற தேர்தல் உங்களுக்கான சந்தர்ப்பம் ஆகும்.
ஏனைய கட்சிகளில் வெல்ல வேண்டும் என்றால் 45000 க்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும் ஆனால் எமது மையில் கட்சியில் 10000 வாக்குகளை ஒரு வேட்பாளர் எடுப்பாரானால் அவர் இலகுவாக தெரிவாகுவார். இது உங்கள் ஊருக்கான சந்தர்ப்பமாகும் எனவே சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருதமுனை மக்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையாக வாக்களித்தால் நீண்டகால அரசியல் அதிகாரம் எனும் வெற்றிடத்தை இலகுவாக நிரப்ப முடியும்.
இதில் முன்னாள் பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்றூப், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தவிசாளருமாகிய அமீர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மாற்று கட்சிகளில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த பலர் வை.கே.றஹ்மானுக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஆதரவாளர்கள் மத்தியில் வேட்பாளர் வை.கே.றஹ்மான், அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.