ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பதவியை பொறுப்பேற்று மஹிந்ட்க ராஜபக்ஷ ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கதும் அனைத்து இனங்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் அரவணைக்கும் உரையாக இருந்தது மகிழ்ச்சியான விடயமாகும்.
கடந்த நான்கு வருடமாக ஆட்சி செய்யும் ஐ தே க அரசு முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்படும் போது புதினம் பார்த்துக்கொண்டிருந்தது. பஸ்களில் காடையர்கள் வந்து தாக்குவதற்கு ஏதுவாக ஊரடங்கு சட்டம் போட்டு அவர்களுக்கு உதவியது.
காடையர்கள் தூர இடங்களில் இருந்து வந்து தாக்குதல் நடப்பது என்பது பொலிசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது.
குஜராத்தை மோடி ஆட்சி செய்த போதும் இவ்வாறான கலவரத்தை ஏற்படுத்திய போது அவற்றின் பின்னணியில் மோடி இருப்பதாக இந்திய முஸ்லிம்கள் கூறினார்களே தவிர எதிர்க்கட்சியான காங்கிரஸ் இருப்பதாக சொல்லவில்லை. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் சிலர் ஐ தே க ஆட்சியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான மிருகத்தனமான தாக்குதல்களின் பின்னால் ராஜபக்ஷாக்கள் இருப்பதாக முட்டாள்தனமாக சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
புத்தியுள்ள முஸ்லிம்களுக்கு உண்மை எது என்று தெரியும். இந்த கையாலாகா அரசை தக்க வைப்பதற்காகவே அம்பாரை முதல் கண்டி, திகன, காலி, குருனாகல் என முஸ்லிம்களின் கிராமங்களும் பள்ளிவாயல்களும் வர்த்தக நிலையங்களும் ஐ தே க அரசின் ஆசீர்வாதத்துடன் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டது என்பது புத்தியுள்ள முஸ்லிம்களுக்கு தெரியும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையில் நாம் அமைக்கும் அரசில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல தினமும் ஐ வேளை தொழுகைக்காக அச்சமின்றி செல்லும் நிலையை உருவாக்குவோம் என கூறியதற்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி சொல்கின்றோம் என உலமா கட்சித்தலைவர் தெரிவித்தார்.