தன்னை அதிகம் நெருக்குதலுக்குள்ளாக்கினால் பதவியைத் துறந்துவிட்டு பண்ணைக்குச் சென்றுவிடுவேன்- மைத்திரி ஆவேசம்


ன்னை அதிகம் நெருக்குதலுக்குள்ளாக்கினால், நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஜனாதிபதிப் பதவியைத் துறந்துவிட்டு சொந்த ஊரான பொலனறுவையில் உள்ள பண்ணைக்குச் சென்றுவிடுவேன் என்று மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் கடும் கோபத்துடன் தெரிவித்தார்.
இந்தத் தகவலை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தனது கீச்சகத்தில் நள்ளிரவு வெளியிட்ட பதிவிலேயே இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. அதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பங்கேற்றிருந்தார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, உணர்ச்சிவசப்பட்டு, தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன்” என்று கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது?
ஜனாதிபதியுடனான பேச்சின் போது என்ன நடந்தது என்று விவரிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

மைத்திரி திரும்ப, திரும்ப தனக்கும், ரணிலுக்கும் இடைப்பட்ட முரண்பாடுகளை வரிசைப்படுத்திக்கொண்டே வந்தார். போதாததுக்கு, அமைச்சரவை அமைச்சர்களான உங்களுக்கு இவை எல்லாம் தெரியும்தானே என எம்மையும் துணைக்கு அழைத்து பேசிக்கொண்டே போனார்.
எல்லோரும் பேசினார்கள். நான் ஆரம்பத்தில் பேசவில்லை. இனி இது தொடர்பில் இவரிடம் பேசுவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என நான் மௌனமாகவே கேட்டுக்கொண்டு இருந்தேன்.ஒரு கட்டத்தில், மௌனத்தை கலைத்து பேசினேன்.
“ஜனாதிபதி அவர்களே! ஐதேமு என்பது ஐக்கிய தேசியக் கட்சியை மட்டும் இல்லை. இந்த முன்னணிக்குள்ளே தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய, ராஜித-அர்ஜுன குழு என 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம்.

நாம் அனைவரும் உங்களுக்காக 2015ஆம் ஆண்டு, நாடு முழுக்க ஓடோடி கடுமையாக தேர்தல் பணி செய்தவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு மட்டுமல்ல, எங்கள் மக்களும் உங்களுக்கு பெருவாரியாக ஆதரவு வழங்கினார்கள்.
உங்களுக்கும், பிரதமர் ரணிலுக்கும் பிரச்சினைகள் இருந்தது ஓரளவு எங்களுக்கு தெரியும். ஆனால், 2015ஆம் வருடம், நாம் ஒன்று சேர்ந்து தோற்கடித்த மகிந்தவை அழைத்து வந்து பிரதமராக நியமிக்கும் அளவுக்கு அந்த முரண்பாடு இருந்தது என எங்களுக்கு தெரியாது. எனவே உங்கள் இந்த செய்கை எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஐதேகவை தவிர்த்து எங்களை மட்டுமாவது அழைத்து, பிரதமர் ரணிலுடனான உங்கள் முரண்பாடுகளை, இன்று சொல்வதை போல், நீங்கள் ஏன் விலாவாரியாக எடுத்து கூறவில்லை? இந்த முரண்பாடுகள் தீராவிட்டால், நீங்கள் ஒரு கடும் முடிவை எடுக்க நேரிடும் என எமக்கு ஏன் தெரிவிக்கவில்லை?
அப்படி நடந்திருந்தால், நாங்கள் உங்களுக்கும், பிரதமருக்கும் இடையில் இருந்த முரண்பாட்டில் தலையிட்டு இருப்போம்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சிங்கள மொழியில் நேரடியாக கேட்டேன்.
அவர் எந்த ஒரு பதிலும் எனக்கு சொல்லவில்லை. என் முகத்தை ஒரு கணம் உற்று பார்த்துவிட்டு, அடுத்த விடயத்துக்கு போய்விட்டார். அடுத்த ஐந்து நிமிடத்தில் பேச்சுக்கள் முடிந்தது.

என்னுடன் ரவுப், ரிஷாத், திகா, கபீர் ஆகிய தமிழ், முஸ்லிம் எம்பிக்களும் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்களை தவிர, சஜித், ரவி, லக்ஸ்மன், அகில, மலிக், கயந்த, ராஜித, அர்ஜுன ஆகிய எம்பிக்களும் இருந்தார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -