அஸ்லம் எஸ். மௌலானா-
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் கல்முனை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (14) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி கீதமும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் மாநகர ஆணையாளரினால் அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரமணியம் சுபராஜன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன், கால்நடை வைத்திய அதிகாரி வட்டபொல, வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், உள்ளூராட்சி உதவியாளர் சர்ஜூன், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நௌசாத் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வருமானப் பரிசோதகர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி வாரத்தின் முதலாம் நாள் செயற்றிட்டமாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. இந்நடமாடும் சேவைகள் கல்முனை, மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பொது நூலகங்களில் இடம்பெற்றதுடன், பொதுமக்களுக்கு தேவையான உள்ளூராட்சி சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொடுக்கும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
மாநகர சபையின் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லவும், மக்கள் பங்கேற்புடனான நகர அபிவிருத்தி மற்றும் சிறந்த உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்த உள்ளூராட்சி வார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpg)

.jpg)
0 comments :
Post a Comment