கல்முனை மாநகரின் பிரதான வீதிகளில் கடந்த சில காலமாக செயலிழந்து காணப்பட்ட மெகா மின் விளக்குத் தொகுதிகளைப் புனரமைத்து, புதிய மின் விளக்குகளைப் பொருத்தும் விசேட வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் நேற்று வியாழக்கிழமை (16) இரண்டாவது நாளாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக இவ்விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்காக அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமான நவீன மின் உயர்த்தி (Hydraulic Lift) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக, கல்முனை சிறுவர் பூங்காவில் நீண்டகாலமாக செயலிழந்து ஒளிராமல் காணப்பட்ட மின் விளக்குத் தொகுதிகள் மேற்படி மின் உயர்த்தியின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீண்டும் ஒளியூட்டப்பட்டுள்ளன.
அதேபோன்று, சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா மற்றும் மருதமுனை சிறுவர் பூங்காவில் செயலிழந்து காணப்பட்ட அனைத்து மின் விளக்குத் தொகுதிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புனரமைக்கப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளின் பிரதான வீதிகளில் செயலிழந்து காணப்படும் மெகா மின் விளக்குத் தொகுதிகளும் புனரமைக்கப்பட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக கல்முனை மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் இரவு நேரங்களில் வீதிப் பாதுகாப்பு மேம்படுவதுடன், பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியும் நகரின் அழகிய தோற்றமும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment