தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் கட்சிகளின் அண்மைய ஒருங்கிணைப்பு இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணியல்ல; மாறாக நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அரசியல், சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலான ஒத்துழைப்பு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று (13) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஒருங்கிணைப்பைச் சுற்றி எழுப்பப்பட்டு வரும் விமர்சனங்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், இந்தக் கூட்டணி இன அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றார். மக்கள் ஆணையுடன் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பாகவே இந்த ஒருங்கிணைப்பு உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பேரினவாத அரசியலுக்கு எதிராக ஜனநாயக வழியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தியே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது எந்த சமூகத்திற்கும் எதிரான கூட்டணியல்ல என்றும் ஹக்கீம் வலியுறுத்தினார்.
நாட்டின் இறைமை, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஜனநாயகப் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்துவது போன்ற பொதுவான தேசிய இலக்குகளை முன்னிறுத்தியே இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலங்களிலும் அதற்கு அப்பாற்பட்ட காலங்களிலும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் நிர்வாகச் சவால்களுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே இந்த ஒத்துழைப்பின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைப்பு நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானதல்ல; மாறாக அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியாக செயற்படும் அரசியல் தளமாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மை சமூகங்களின் அரசியல் குரல் பலமாக ஒலிக்க வேண்டிய தற்போதைய சூழலில், பொதுவான பிரச்சினைகளில் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கி, அரசாங்கத்துடனும் ஏனைய அரசியல் தரப்புகளுடனும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் இந்த ஒத்துழைப்பு உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், சமூகங்களின் எதிர்கால முன்னேற்றம், அரசியல் உரிமைகள், கல்வி, அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான பொறுப்புணர்வுடனேயே இந்த ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இந்த ஒத்துழைப்பில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஆறு முக்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. அவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு என்பனவாகும்.
இந்தக் கூட்டணியின் அடிப்படை நோக்கம் எந்தவொரு இனத்திற்கும் எதிராகச் செயற்படுவதல்ல; மாறாக ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் நியாயமான அபிலாஷைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பங்களிப்பதே என ரவூப் ஹக்கீம் தனது விளக்கத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

0 comments :
Post a Comment