நூருல் ஹுதா உமர்-
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தரத்தையும் நோயாளர்களுக்கான மருத்துவச் சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு துரித அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத் தொகுதியில் அத்தியாவசிய மருத்துவப் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளை வினைத்திறனுடன் பூர்த்தி செய்யும் வகையிலும், நோயாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டும் வைத்தியசாலை நிர்வாகம் சில முக்கிய பிரிவுகளை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்டு வரும் உள் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய மருத்துவப் பிரிவுகளின் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் கடந்த 15 ஆம் திகதி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது புதிய கட்டிடத் தொகுதியைப் பார்வையிட்ட அவர், விடுதி மறுசீரமைப்புகள், புதிய மருத்துவ உபகரணங்களின் ஒழுங்கமைப்புகள் மற்றும் நோயாளர்களுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாத வகையில் சேவைகளைத் தொடரும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
தொடர்ந்து, வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், நிலவும் குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டி. பிரபாசங்கர், விசேட வைத்திய நிபுணர்கள், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர் உள்ளிட்ட பல வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.
புதிய பிரிவுகளை திறம்பட இயக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் தற்போதைய வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சீன அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நவீன கட்டிடம் விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் விசேட மருத்துவப் பிரிவுகள் உட்பட பல சேவைகள் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

0 comments :
Post a Comment