கல்வியின் மூலமாக மட்டுமே ஒரு சமூகம் உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும், சமூக சேவைக்காக அரசியல் அவசியமில்லை என்றும் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, ரஹ்மத் பவுண்டேசனின் கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு “ஸ்மார்ட் போர்ட்” கையளித்தல் மற்றும் ஏ.ஆர். மன்சூர் தொழிநுட்ப அறை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் பேசுகையில்,
“என்னிடம் ஊர்வாதம், இனவாதம் இல்லை. அவ்வாறான பேச்சுகளை முன்வைத்தவர்கள் எவரும் முன்னேற்றமடைந்ததாக வரலாறு சொல்லவில்லை. நகர்ப்புற பாடசாலைகளை விடவும், வளங்கள் குறைந்த நிலையிலும் இந்த பாடசாலை பல சாதனைகளை புரிந்துள்ளது” எனக் குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் இதனை சுட்டிக்காட்டியமை அனைவருக்கும் பெருமை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பாடசாலையில் கல்வி கற்க சேர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும், மாணவர்கள் கல்வி கற்று எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இந்த பாடசாலை மாணவர்கள் சமூகத்தின் சொத்துகள். கல்வியின் மூலமே நம் சமூகத்தை முன்னேற்ற முடியும்” என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா அப்துல் மலீக் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச நலன் விரும்பிகள், பெற்றோர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, இஸ்லாமாபாத் விளையாட்டு கழகம், இஸ்லாமாபாத் அக்கரைக் குழு மற்றும் இஸ்லாமாபாத் ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆகியவற்றின் சார்பில் பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
0 comments :
Post a Comment