கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. -ரணில்



திர்கால நோக்குடன் புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பிரதான கடன் வழங்குநர்கள் கொள்கையளவில் அதற்கு இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2023 டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை தொடர்பான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம், 2024 இல் இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நகர்வதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் சுவிஸ் ஆசிய வர்த்தக சம்மேளனம் என்பன இணைந்து நேற்று (15) சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகத் துறையினருடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 54 ஆவது வருடாந்த கூட்டத்துடன் இணைந்ததாக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளில் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க செயற்திறனைப் பெற்றுள்ளதாக தெரிவித்ததையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், கடன் வழங்குநர்களை கையாள்வதில் அவ்வாறான ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெளிநாட்டு நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் சேவைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது, வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களில் பணப்புழக்கத்தை மீளமைத்த்து மற்றும் 1977இற்குப் பின்னர் முதல் முறையாக கொடுப்பனவுகளின் முதன்மை இருப்பு மேலதிக நிலைக்கு பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட பல விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து நிதி ஸ்திரத்தன்மை ஏற்படல், பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் மறைப் பெறுமான பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்ட சாதகமான குறிகாட்டிகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை எட்டுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் அடையாளம் என்றும் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, விவசாய நவீனமயமாக்கல், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றில் அரச – தனியார் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சந்தை பிரவேசத்தை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் குறித்தும் ஜனாதிபதி குறிப்பிட்டார். முதலீடு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :