மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே பரத நாட்டியம், கிராமிய நடனம், சங்கீதப்பாடல் ஆகிய போட்டிகளை நடாத்தி வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை செங்கலடி பிரதேச கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரன்ஜினி முகுந்தன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேல் மருத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மறைந்த இசைமேதை, கர்நாடக சங்கீத ஆசிரியை சிவசக்தி சிவநேசன் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மன்றத்தின் இணைப்பாளர் கே. துரைராசா தலைமையில் நடைபெற்றது.
செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஈ. சிறிநாத் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதிய பொறுப்பதிகாரி ஏஎம்எம். நஜீப் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.
இசை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் பணியாற்றிய சமூக முன்னோடிகள் பலர் இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களான வாகரை மற்றும் கரடியனாறு போன்ற பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழில் உபகரணங்களும் மறைந்த இசைமேதை, கர்நாடக சங்கீத ஆசிரியை சிவசக்தி சிவநேசன் நினைவாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment