மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஆறு மாதங்களுக்கு பின்பு விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் பலவித வாதப்பிரதிவாதங்களை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.
அதாவது அவரது விடுதலைக்கு இவர்தான் அல்லது இதுதான் காரணம் என்று ஒவ்வொரு தரப்பினரும் முரண்பாடான அல்லது தான்சார்ந்த அரசியல் தரப்பினர்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
ஆனால் எம்மை படைத்த இறைவனின் நாட்டம் ஒன்று உள்ளது என்பதனை அனைவரும் மறந்துவிட்டனர். ஒருவரை கைது செய்வதற்கும், விடுதலை செய்வதற்கும் ஆட்சியாளர்களின் மனங்களில் எண்ணங்களை தோன்ற செய்வது இறைவன்.
எது எப்படி இருப்பினும் “சிறை” என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நபி யூசுப் அவர்களின் வரலாறாகும். இந்த வரலாற்றை படிக்கின்றபோது இந்த உண்மைகளை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
இங்கே நபி யூஸுப் அவர்களோடு றிசாத் பதியுதீனை ஒப்பிட்டுள்ளதாக நீங்கள் கருதினால், உங்களின் முட்டாள்தனத்துக்கு நான் பொறுப்பல்ல.
றிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டபோது அவரது கட்சி ஆதரவாளர்களே அதனை கண்டிக்க தயங்கிய நிலையில், அந்த கைதை கண்டித்து பல கட்டுரைகளை அப்போது நான் எழுதுதியிருந்தேன்.
ஆனாலும் அவர் விடுதலை செய்யப்பட்டபோது பலரும் முண்டியடித்துக்கொண்டு அவருக்கு ஆதரவாக எழுதிய நிலையில் நான் எதுவும் எழுதவில்லை.
கட்சி அரசியலுக்கப்பால் எதுவாக இருந்தாலும் உண்மையை துணிந்து கூறுவதற்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயங்ககூடாது. அத்துடன் தனிநபர் சார்ந்து அரசியல்வாதிகள் செய்கின்ற சமூக துரோகங்களுக்கு துணைபோகவும் கூடாது.
அரசியல்மயப்படாத முஸ்லிம்கள் மத்தியில் சமூகத்துக்கான நீதியைவிட தனிநபர் சார்ந்து வக்காலத்து வாங்குகின்றவர்களே இன்று அதிகமாக உள்ளனர். இது எதிர்கால சமூக அரசியலுக்கு ஆபத்தானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
0 comments :
Post a Comment