J.f.காமிலா பேகம்-
நாட்டை முழுமையாக முடக்காமல் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று காலை நடந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளராகிய அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு கூறினார்.
எந்த விதத்திலும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், சுகாதார நெறிமுறைகளை மக்கள் பின்பற்றி, கோவிட்-19இனை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
“நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை அரசாங்கம் நன்று அறிந்துதான் வைத்திருக்கின்றது. இதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமையில் 60 இலட்சம் குடும்பங்களுக்கு 60 பில்லியன் ரூபா வரையிலான உதவித் தொகையை நெருக்கடியான தருணத்திலும் அரசாங்கம் வழங்கியது.
இந்த சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான பிரதேசங்களில் நிலைமைகளை வழமைக்குக் கொண்டுவரவே முயற்சிக்கின்றோம். அதனால்தான் ஓரிரு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும்படி ஜனாதிபதி பணித்திருந்தார். மக்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு அரசாங்கம் என்கிற வகையில் வருந்துகிறோம். அதேபோல மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment