அபு அத்திய்யா-
அ.இ. மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் அரசின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார், என்ற குற்றச்சாட்டின் பின்னணியில், அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அவரை தேடும் நடவடிக்கையில் ஆறு பொலிஸ் குழுக்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வேலை அவரது கணக்காய்வாளர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் அக்கிராச உரையில் தெரிவிக்கப்பட்ட "ஒரே நாடு ஒரே சட்டம்"என்ற கூற்றுக்கான தெளிவான விளக்கம், இலங்கை நாட்டின் இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதாகும்.
இதனை தலைவர் ரிஷாட் அவர்கள் மீதான கைது மிகவும் தெளிவாக மக்களுக்கு சொல்கின்றது, என அ.இ.ம.காங்கிரசின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைதுக்கு எதிராக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், வாக்களித்தல் என்பது நாட்டின் பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். யுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது பெரும் குற்றமாக கருதப்படுகிறது.
கொலைக்குற்ற வழக்குகளை எதிர்கொண்ட பின்னர் அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை மூடி மறைத்து, இப்போது சுகபோக வாழ்க்கை அனுபவிக்கும் ஆட்சியாளர்களும், கொலைக்குற்ற வாளிகளாக இனம் காணப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழகுகியுள்ள அரசும், அற்ப காரணங்களை காட்டி முன்னாள் அமைச்சர் ரிஷாட் அவர்களை கைது செய்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அரசின் இச் செயற்பாடானது, சட்ட ஆட்சியில் நிர்வகிக்கப்படும் இந்த நாட்டை நல்லாட்சி போன்ற நல்ல விழுமியங்கள் இல்லாத ஏகாதிபத்திய வளர்ச்சியை நோக்கி நகர்வதை காட்டுகின்றது. இது நாட்டுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
அரசாங்கத்தின் நிருவாகம் உள்ளிட்ட சில விடயங்களில் சற்றளவான திருப்தி நிலை காணப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் சமகால செயட்பாடுகளை அவதானிக்கின்ற போது மிகுந்த ஏமாற்றத்தை தருகின்றது.
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் " நிதி அமைச்சின் அனுமதியுடன், சட்ட ரீதியான முறையிலேயே பொதுப்போக்குவரத்து பஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன, அதற்கான சான்றுகளும் உள்ளன "என தெரிவித்துள்ள நிலையில், நீதிக்கு புறம்பாக வெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காக தலைவர் ரிஷாட் அவர்களை கைது செய்ய அரசு எடுக்கும் முயட்சியை உடனடியாக கைவிட வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment