வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை இரவு கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.
வறக்காபொல கொரகொல்ல பிரதேசத்தினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் வட்ஸ்அப் வலையமைப்புக்களுக்கு ஊடாக பணம் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு பாசிக்குடா பிரதேசத்தில் வைத்து கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக ஒரு குழுமத்தை அமைத்து ஏதோவொரு வகையில் பிறரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை உள்வாங்கி நம்பிக்கையை ஏற்படுத்தி பண பரிமாற்றம் செய்து அதன் ஊடக பணத்தினை கொள்ளையடித்து ஏமாற்றும் செயலை குறித்த இளைஞர் மேற்கொண்டு வந்துள்ளார்.
இராணுவ புலானய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை தந்திரமான முறையில் பாசிக்குடா பிரதேசத்திற்கு வரவழைத்து கல்குடா பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நீதவானின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment