ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் ( Sinovac Biotech ) நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பல நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்க்கும் அன்டிபாடியை ( Antibody ) கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கிவிட்டதாக இத்தாலியும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் ( PiCoVacc ) எனப்படும் இந்த மருந்தை சீனாவைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய 3 வாரத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.
ஒரு வாரத்துக்கு பிறகு சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்படாத கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் ( PiCoVacc ) தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளது.