கொழும்பு மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு இக்காலப்பகுதியில் வருகை தரும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் உரிய தரப்புகளுக்கு தகவல்களை வழங்க வேண்டும் என கொட்டக்கலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.
அவர் கருத்து தெரிவிக்கையில்
வெளி மாவட்டங்களிலிருந்து அனுமதியின்றி தலவாக்கலை நகர் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு வந்து சிலர் இரகசியமாக ஒழிந்திருக்கலாம். அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அல்லது தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும். இதனால் நாமே நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே அனைவரும் விழிப்பாக இருங்கள் தகவல்களை உடனுக்குடன் வழங்குங்கள். கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து எவ்வித தகவல்களையும் வழங்காமல் தலவாக்கலை ஹேமச்சந்திர மாவத்தையில் ஒளிந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள்ளேயே (02.04.2020) முதல் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். புத்தளத்தை சேர்ந்த ஒருவரும், கொழும்பில் தொழில் புரியும் மற்றுமொரு நபருமே தலவாக்கலையிலுள்ள ஹேமச்சந்திர மாவத்தையில் இவ்வாறு ஒளிந்திருந்தனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுகாதார பரிசோதனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே அவர்களை கண்டுபிடித்து, 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த நபர்கள்; எக்காரணத்தினை கொண்டும் 14 நாட்களுக்கு வெளியில் செல்லக்கூடாது என இதன் போது உத்தரவிடப்பட்டது. கொழும்பில் தொழில் புரிந்த நபரின் வீடு ஹேமச்சந்திர மாவத்தையிலேயே அமைந்துள்ளது. இதனால் தன்னுடன் பணிபுரிந்த புத்தளத்தை சேர்ந்த நபரையும் அழைத்துக்கொண்டே அவர் இப்பகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மக்களின் நலன் கருதி யாராவது வெளி மாவட்டங்களிலிருந்து உங்களுடைய பிரதேசங்களில் வந்து தங்கியிருந்தால் உடனடியாக பொது சுhகதார பரிசோதகர்களுக்கோ அல்லது உங்கள் பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையத்திற்கோ தெரியப்படுத்துங்கள் என்றார்.
