கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கும் நீடிக்கப்படக் கூடிய நிலைமையுள்ளதாக கொரோனா வைரஸ் பரவியுள்ள நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் IDH வைத்தியசாலை பணிப்பாளரும் , வைத்தியருமான சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என எவரும் நினைக்கக்கூடாது. இவ் வைரஸின் தாக்கம் சர்வதேச அளவில் மிகவும் உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் இடம்பெறும் உயிரிழப்புக்களால் உலகமே செய்வதறியாது தவிக்கின்றது. எனவே எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம்.
எனவே இலங்கை மக்கள் பொறுப்பின்றி கவனயீனமாக நடந்தால் ஒரு மாதத்துக்கு கூட ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படலாம்.
இலங்கை தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நிலையில் தான் இருக்கின்றது. வைத்தியர்கள் நேரம் காலம் பாராமல் தமது சேவையை செய்து வருகின்றனர்.
தற்போது வரை 106 நோயாளர்களை இனம் கண்டிருக்கிறோம். இன்னும் பலர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இயலுமானவரை மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். முககவசத்தை அணிந்திருப்பதால் மட்டும் இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்த முடியாது. தொடுகை மற்றும் மற்றவர்களை நெருக்கமாக அணுகுவதாலும் இந்த வைரஸ் பரவும்.
சமுகத்தில் மறைந்திருக்கும் கொரோனா வைரஸ் வரும் நாள்களில் கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை மாறலாம். அவர்களிடமிருந்து மேலும் பரவலாம். சிலவேளைகளில் சிலருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் குறைந்தும் காணப்படலாம்.
எனவே அருகில் இருப்பவருக்கு வைரஸ் இருப்பதாக நினைத்துக் கொண்டு இடைவெளியை பேணுதலே சிறந்த வழிமுறையாக கருதப்படுகின்றது.
மக்களின் இடைவெளியை குறைத்தலும் சமுக இடைவெளியை பேணுவதையே வைத்தியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஊரடங்குச் சட்டம் உள்ள போதிலும் அதனை மக்கள் மீறினால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
எனவே ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட கவனயீனமாக இருந்தால் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படலாம். அனைத்தும் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என தெரிவித்தார்.