கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நான்கரை வருட காலப்பகுதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளை எனது மனசாட்சிக்கு இணங்க சிறப்பாக செய்ய உதவிய, ஆலோசனை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இந்த நான்கரை வருடங்களில் தனியே அபிவிருத்தியையோ தனியே சமூகத்தின் குரலாகவோ அன்றி அபிவிருத்தியையும் சமூகத்தின் உரிமை குரலையும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சமாந்தரமாக இன, மத பிரதேச, கட்சி வேறுபாடு இன்றி முன்னெடுத்ததாக நம்புகிறேன்.
இந்த நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களின்றி எதுவித மேலதிக சொத்துக்களோ, எதுவித அனுமதிபத்திரங்களோ எனது பெயரிலோ, எனது நெருக்கமானவர்கள் பெயரிலோ பெறாமல் எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயற்பட்டத்தை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
என்மேல் பல எதிர்பார்ப்புக்களை வைத்து கடந்த தேர்தலில் 32000 க்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தார்கள், உண்மையில் அனைவருடைய எதிர்பார்ப்பையும் என்னால் பூர்த்தி செய்யாவிட்டாலும் என்னால் முடியுமான அளவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக நம்புகிறேன்.
ஆகவே இந்த நான்கரை வருட காலப்பகுதியில் எனக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்வதோடு எனது செயற்பாடுகள் உங்களுக்கு திருப்தி அளித்திருப்பின் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் உங்கள் ஆதரவை கோருகிறேன்.உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் அந்த முடிவை முழு மனதோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றி.