உலகின் வல்லரசு நாடுகளை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ் ஏழ்மை நிறைந்து காணப்படும் ஆபிரிக்கா கண்டத்தையும் தாக்கி வருகிறது. தற்போதைய நிலையில் ஆபிரிக்கா கண்ட நாடுகளில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ எட்டுகிறது. 5,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், UK என கொரோனா இப்போது அமெரிக்காவை அதிரவைக்கிறது.
உலகில் அந்தார்ட்டிக்கா கண்டத்தைத் தவிர அத்தனை கண்ட நாடுகளையும் கொரோனா நிலைகுலைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் பல்வேறு தொற்று நோய்களாலும் ஆட்கொல்லி நோய்களாலும் பேரழிவை எதிர்கொண்டு வரும் ஆப்பிரிக்காவையும் கொரோனா கொடூரமாக தாக்கி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளில் இதுவரை 174 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சுமார் 6000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள 47 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. 7 நாடுகள் கொரோனாவின் தாக்குதலில் இருந்து விடுபட்டுள்ளன. வட ஆபிரிக்காவில் எகிப்தில்தான் மிக அதிகமாக கொரோனாவின் பாதிப்பு இருக்கிறது. அங்கு 656 பேரும் அல்ஜீரியாவில் 584 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக மொரோக்கோவில் 556 பேரும், துனிசியாவில் 362 பேரும்,
லிபியாவில் 8 பேரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.
மேற்கு ஆபிரிக்காவில் பேர்கின் பாசோவில் 246 பேரும், ஐவரி கோஸ்ட்டில் 168 பேரும் , செனகலில் 162 பேரும், நைஜீரியாவில் 131 பேரும் , கானாவில் 152 பேரும், டோகோவில் 30 பேரும், நைஜரில் 27 பேரும், மாலியில் 25பேரும், கினியாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்பிராந்தியத்தில் சியாரா லியோன் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
மத்திய ஆப்பிரிக்காவில் கேமரூனில்தான் அதிகபட்சமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு ஆபிரிக்காவில் தென்னாபிரிக்காவில்தான் மிக அதிகமாக 1,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மடகஸ்கரில் 44 பேரும் சாம்பியாவில் 35 பேரும் உள்ளனர். கிழக்கு ஆபிரிக்காவில் மொரீஷியஸில் 128 பேரும், ருவாண்டாவில் 70 பேரும், உகண்டாவில் 33 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புரூண்டி, தெற்கு சூடான் நாடுகளில் கொரோனா தாக்கம் இதுவரை இல்லை என தெரியவந்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் ஆப்பிரிக்கா நாடுகள் லொக்டவுன் ( Lockdown ) உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன. ஆனாலும் கொரோனா விஸ்வரூபம் எடுத்தால் அதை எதிர்கொள்ளக் கூடிய வலிமை ஆபிரிக்கா நாடுகளுக்கு இல்லை. இதனால் சர்வதேச சமூகம், கொரோனாவால் ஆபிரிக்கா எப்படியான பேரழிவை எதிர்கொள்ளுமோ என்கிற கடும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனமும் இதற்கான முன்னெச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
ஏற்கனவே ஆப்பிரிக்காவை எபோலா வைரஸ் சில வருடத்துக்கு முன்னர் கடுமையாக தாக்கியது. இதில் ஆபிரிக்காவில் மட்டும் 11 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேபோல் எய்ட்ஸால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் ஆபிரிக்காவில் உயிரிழந்து வருகின்றனர். 2018ம் ஆண்டில் மட்டும் நான்கு லட்சத்தி 70 ஆயிரம் பேர் ஆபிரிக்காவில் எய்ட்ஸால் உயிரிழந்திருக்கின்றனர். இச் சூழ்நிலையில் கொரோனா எந்த வகையான ஆட்டத்தை காட்டுமோ என்கிற அச்சம் ஆபிரிக்காவில் எழுந்துள்ளது.