தொலைபேசியில் தொடர்புகொண்டால் காலடியில் மருந்து கிடைக்கும்.
கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் முரளீஸ்வரன் தகவல்.
காரைதீவு நிருபர் சகா-எமது வைத்தியசாலையில் நடைபெறும் ஆறுவகையான கிளினிக்குகளில் சிகிச்சைபெற்றுவரும் நோயாளர்களுக்கு இரண்டுமாதத்திற்குத் தேவையான மருந்துகளை ஒரே தடவையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
ஊரடங்கு தொடர்ச்சியாக அமுலிலுள்ள இக்காலகட்டத்தில் கிளினிக்குகளுக்கு வரமுடியாமல் நோயாளிகளுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்களா எனக்கேட்டதற்கு அத்தியட்சகர்மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது வைத்தியசாலையில் கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகள் இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலைக்கு வரமுடியாது.எனவேதான் இந்நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
இதயநோய்கிளினிக் சிறுவர்கிளினிக் நீரிழிவுநோய் கிளினிக் தோல்நோய்கிளினிக் கண்நோய்கிளினிக் மகப்பேற்றுகிளினிக் மற்றும் பொதுவான கிளினிக்குகள் நடைபெற்றுவருகின்றன.இவைகளில்சுமார் 5000பேரளவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் அவர்களால் வைத்தியசாலைக்கு ஒரேநாளில் வருகைதரமுடியாதென்பதை நாமறிவோம். அதற்காக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
கிளினிக் நோயாளர்கள் அதற்காக செய்யவேண்டிய நடைமுறை இதுதான். அதாவது காலை 8.30 மணிதொடக்கம் நண்பகல் 12.30வரையிலான காலப்புகுதிக்குள் எமது வைத்தியசாலை தொலைபேசி இலக்கமான 067 2229261 என்ற இலக்கத்திற்கு தொடர்பை மேற்கொண்டு தாம் செல்லும் கிளினிக்கின் வகையை தெரியப்படுத்தி வழமையாக பெறும் மருந்தையும் குறிப்பிட்டுச்சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல அவற்றை தமக்குவசதியாகப்பெறக்கூடிய சமீபமாகவுள்ள இடத்தினையும் தெரிவிக்கவேண்டும்.
அப்போது நாம் இருமாதங்களுக்கான மருந்தைப்பொதிசெய்து விலாசமிட்டு அனுப்பநடவடிக்கை எடுப்போம்.
அதுமட்டுமல்ல அவர்களுக்கு மேலுமொரு வசதியையும் செய்துள்ளோம். இரண்டு மாதத்திற்கான மருந்துப்பொருட்களை ஒரே தடவையில் பொதிசெய்து அவர்களது வாழ்விடத்திற்கு சமீபமாகவுள்ள வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு விலாசமிட்டு அனுப்பிவைப்போம்.