பல்கலைகழக மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படும் பகடிவதை தொடர்பாக அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலையில் வைத்து 09.02.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல்கலைகழக மாணவர்கள் என்பவர்கள் இந்த சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு எங்களுடைய மக்களை கொண்டு செல்ல வேண்டியவர்கள். எனவே பல்கலைகழக பகடிவதை புரிவது தேவையற்ற செயல்களில் ஈடுப்படுவது கண்டிக்கதக்க விடயமாகும். இது தொடர்பாக அரசாங்கம எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்க தயாராக இருக்கின்றோம்.
மலையகத்தை பொருத்தளவில் மலையகத்திலிருந்து தெரிவு செய்யபடும் மாணவர்களின் தொகையானது மிகவும் குறைவாக இருக்கின்றது.
அப்படியும் எங்களுடைய மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொள்கின்றார்கள்.
எனவே அவர்கள் தங்களுடைய பல்கலைகழக வாழ்க்கையை சரியான முறையில் நிறைவு செய்து வெளியேறுகின்ற போது தான் இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும்.
குறிப்பாக வைத்தியத்துறை, பொறியியற்துறை, பட்டய கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சிந்தனையானளர்கள் போன்றவர்கள் வருகை மலையகத்திற்கு மிகவும் இன்றியமையாதது.
அண்மையில் லிந்துலை பகுதியில் ஒரு மாணவன் தற்கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள்.
இவர்கள் அணைவரும் தமிழ் மொழி பேசும் சமூகத்தை சார்ந்தவர்கள். இவர்களில் யார் பாதிக்கப்பட்டாலும் மலையகம், வடகிழக்கு சப்ரகமுவ, ஊவா, போன்றவர்களை குறிப்பிடலாம்.
மலையகத்தை பொருத்தளவில் பெற்றோர்கள், பிள்ளைகளை பல்லாயிரம் கனவுகளுடன் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.
அவர்கள் சில நேரங்களில் தங்களுடைய உணவு சுகபோகங்கள் அனைத்தையும் விட்டுக்கொடுத்தே அதனை செய்கின்றார்கள்.
எனவே எங்களுடைய மாணவர்கள் பல்கலைகழகம் செல்கின்ற பொழுது அவர்கள் முழுமையாக நிறைவு செய்து வந்தால் மாத்திரமே நாங்கள் உரிய பயனை பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இதன்போது அவர் வலியுறுத்தினார்.
