எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்படும் “சுத்தமான சூழல் சுகமான வாழ்வு” வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான பொது நிறுவனங்களில் சிரமதானம் செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இளைஞர் கழகத்தின் தலைவர் மௌலவி ஏ.பீ. நிஸாம் (ஸலாமி) அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம். நசீர் அவர்களின் வழிகாட்டலில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிரதேச செயலக சுற்றுச் சூழல் துப்புரவு செய்யப்பட்டு குப்பை கூலங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
குறித்த கல்லூரியின் மாணவர்களை சமூகப் பணி மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆளுமைத் திறன்களை விருத்தி செய்யும் முகமாகவும், மாணவர்களை சமூக மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டும் எமது கல்லூரியின் இளைஞர் கழகத்தினால் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.முஸ்தபா ஸலாமி தெரிவித்தார்.
அத்தோடு இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி உபசரணையை வழங்கிய பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் இளைஞர் கழகத்தின் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று செயலாளர் தெரிவித்தார்.
குறித்த சிரமதானப் பணியினை மேற்கொண்ட கல்லூரி மாணவர்களுக்கும், நிர்வாகத்தினர்களுக்கும் பிரேதேச செயலக நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.