பூர்த்தி நிலையில் இருக்கும் “இராமலிங்கநகர்” பொன்ற ஒன்றை மலையகத்தில் இதற்கு முன்னர் அமைத்துள்ளார்களா?

 ராகலையில் திலகர் எம்பி 
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
டந்த நாற்பதாண்டு காலமாக மலையகத்தில் பலரும் பல அமைச்சுகளை வகித்து வந்துள்ளனர்.அவற்றுள் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுகள் எல்லாமே ஏற்கனவே இருந்த அமைச்சுக்கள். அப்படி உருவாக்கிய ஒரு அமைச்சையும் ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் கைநழுவ விட்டுவிட்டு கால்நடை அபிவிருத்தி அமைச்சை கட்டுப்படுத்துக் கொண்டு இருந்தவர்கள் மக்களுக்கும் ஒன்றும்செய்யவில்லை. மாடுகளுக்கும் ஒன்றும் செய்யவில்லை. மலையகத்தில் ஒரு மாட்டுப்பண்ணையும் நமது மக்கள் நலன் பெற அமைக்கப்படவில்லை அதில் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவும் இல்லை. ஆனால் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு எனும் அமைச்சை உருவாக்கி அதன் மூலம் நான்கே ஆண்டுகளில் நாம் பல புதிய கிராமங்களை அமைத்துக் காட்டியுள்ளோம். அவர்களும் அய்யா காலத்தில் இருந்தே வீடுகளை அமைப்பதாக அறிக்கை மட்டும் விடுவார்கள். அவர்கள் கிராமங்களை அமைந்திருந்தால் நாங்கள் ராகலையில் அமைத்துவரும் “ராமலிங்கநகர்” போன்ற ஒன்றை காட்டட்டும் பார்க்கலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்,திலகராஜ் சவால் விடுத்துள்ளார்.
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட ராகலை - ஹரஸ்பத்தை - மஹ ஊவா வட்டாரங்களின் அமைப்பாளர்கள் குழு கூட்டம் அண்மையில் உருவாகிவரும் இராமலிங்க நகர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய முன்னணி ராகலை பிரதேச அமைப்பாளரும் வலப்பனை பிரதேச சபை உறுப்பினருமான சண்முகா வின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசார முன்னேற்பாட்டு கூட்டத்தில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள் சுஜிகலா, ரோய், மற்றும் செயலாளர் பாலா, பகவத், உதயகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றி போதே திலகர் எம்பி மேற்படி கருத்துனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் உருவாக்கித்தந்த தோட்ட உட்பட்ட அமைப்பு அமைச்சினை மகிந்த ராஜபக்‌ஷ அரசு இல்லாதொழித்தது. இந்த நிலையிலேயே 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து அன்னம் சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை மீளவும் உருவாக்க வேண்டும். அதன் பரப்பெல்லைகள் அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தோம்.அதன்படியே 100 நாள் ஆட்சி காலத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைப்பு என மீளவும் அமைக்கப்பட்டது. அதன்போது அதன் பரப்பெல்லைகள் அதிகரிக்கப்படாதபோதும் கிடைத்த 300 மில்லியன் ரூபாவைக் கொண்டு 300 வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமங்களை மலையக மாவட்டங்கள் தோறும் அமைத்தோம். இரத்தினபுரி தொலஸ்வல, கேகாலை அட்டாளை, மாத்தளை பிட்டகந்த, கண்டி சோகம, பதுளை எல்ல, ஹப்புத்தளை நுவரெலியாவில் மஸ்கெலியா தலவாக்கலை என பல பகுதிகளில் புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. புசல்லாவை சோகமவில் கே.ராஜலிங்கம்புரம் என்றும், மாத்தளையில் ராமானுஜம்புரம் என்றும். பதுளையில் சுப்பையாபுரம் அக்கரப்பத்தனையில் அஸீஸ்புரம் என்றும் 1947 ல் பாராளுமன்றில் எமது முன்னைய தலைவர்களின் பெயரில் கிராமங்களை உருவாக்கினோம். அந்த வரிசையிலேயே மலையக தனவீட்டு கொள்கையை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் பெயரிலும் தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் சந்திரசேகரன் புரம் என புதிய கிராமம் அமைத்தோம். இதுபோல பல மலையகத் தலைவர்கள், இலக்கியவாதிகள் , தியாகிகள் பெயரில் பல புதிய கிராமங்கள் கட்சி பேதங்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ளன.
இன்று இராகலை பகுதியில் இருந்து 1991 ம் ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த இராமலிங்கம் மாஸ்டர் பெயரில் இராமலிங்கம் நகர் என 164 வீடுகளைக் கொண்ட கிராமத்தை உருவாக்கி வருகிறோம். இப்போது பூர்த்தி நிலையை அடைந்துள்ள இந்த புதிய கிராமம் கண்டி பிரதான வீதியில் அமைவதால் இராமலிங்க நகர் என அழைக்கப்படும் என ஆரம்பநாளிலேயே பெயரிட்டேன்.இப்படி பல கிராமங்களை நாம் அமைத்து காட்டியுள்ள நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் புதிய கிராமம் அமைக்க போவதாக தங்களது 32 ல் 24 வது கோரிக்கையாக தமிழில் முன்வைத்து இருப்பவர் சிங்களத்தில் மாடி லயத்தை அமைப்பதாக சொல்லும் கோட்டபாயவுடன் இணைந்து மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக கூறுவது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -