எஸ்.பி நவாஸ் எஸ்.எஸ்.பி. ஆக பதவி உயர்வு


சட்டத்தரணி ஏ.எல்.ஆஸாத் -
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அத்தியட்சகராக (SP) கடமை புரிந்து வந்த முஹம்மது அலியார் நவாஸ் தற்போது S.S.P யாக கடந்த வாரம் பதவி உயர்வு பெற்றுள்ளார். 35 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு இவருக்குக் கிடைத்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஹம்மது அலியார், பரீதா உம்மா ஆகியோரக்கு சிரேஷ்ட புதல்வராக பிறந்த இவர், தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிரா வித்தியாலயத்திலும், உயர் தரத்தை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையிலும் கல்வி பயின்றுள்ளார். அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் முதலாவது நிரந்தர உதவி பொலிஸ் பரீட்சகராகத் தெரிவு செய்யப்பட்டு 1984ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் இணைந்தார்.
இவர் கல்முனை, கல்கிஸ்ஸ, கொஹூவலை, பண்டாரவளை போன்ற பிரதேசங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், பொலிஸ் நிலையங்களின் மேற்பார்வை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளதுடன்; இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவு, பொலிஸ்மா அதிபர் காரியாலயம் போன்றவற்றிலும் கடமை புரிந்துள்ளார்.
இவர் கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த நேரத்தில் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவாரியான குழப்ப நிலையை சுமூகமாகத் தீர்த்து வைத்ததினால் இன்றும் அம்மக்களினால் மதிக்கப்படும் ஒருவராகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியில் கடமை புரிவதற்காகத் தெரிவு செய்யப்பட்டு, 2005-2006 காலப்பகுதியில் சூடானில் பணிபுரிந்ததுடன் 2017-2019 காலப்பகுதியில் மீண்டும் தென் சூடானில் பணிபுரிந்தார். அத்துடன் இந்தியா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பொலிஸார் தொடர்பான சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார்.
உலக நாடுகளின் மனித உரிமைகளின் முன்னேற்றம் தொடர்பாக நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் குழுக்கூட்டத்தில் கையளிக்க இலங்கை சார்பாக சென்ற குழுவில் இவரும் அங்கத்துவம் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
பொலிஸ் திணைக்கள சட்டப்பிரிவில் 13 வருடங்கள் கடமையாற்றிய இவர்; பதில் பணிப்பாளராக நீண்ட காலம் செயற்பட்டுள்ளதுடன், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பதில் பணிப்பாரளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது பொலிஸ் தலைமையகத்தில் ளுரிpழசவ ளுநசஎiஉநள பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேகச் செயலாளராகக் கடமையாற்றுகிறார்.
பொத்துவிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அப்துல் மஜீட் அவர்களுக்கு பிறகு கிழக்குப் பிராந்தியத்தில் முஸ்லிம் பொலிஸ் அதிகாரியொருவர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு பெற்ற இரண்டாவது உத்தியோகத்தராக நவாஸ் காணப்படுகின்றார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் பட்டமேற் பட்டப்படிப்பையும், மனித உரிமைகள் முதுமானி (MHR) பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். மனித உரிமைகள் முதுமானி பட்டத்தைப் பெறுவதற்கு பொலிஸ் காவலில் சந்தேக நபர்கள் மீதான சித்திரவதை என்ற முக்கிய விடயத்தை ஆய்வு செய்து சமர்ப்பித்தார்.
விளையாட்டுத் துறையிலும் மிகவும் ஆர்வம் கொண்ட இவர்; அம்பாரை மாவட்டத்தில் பல விளையாட்டு கழகங்களில் அங்கத்துவம் வகித்துள்ளதுடன், அக்ரைப்பற்று கால்பந்தாட்ட சம்மேளனத்தை உருவாக்கி அதன் ஸ்தாபக தலைவராகவும் செயற்பட்டார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து 1980ஆம் ஆண்டு பேங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச ரீதியான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் விளையாடினார். இவருடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மற்றுமொரு பிரபல்ய கால்பந்தாட்ட வீரரும், ஓய்வு பெற்ற அதிபருமான ஏ.ஜி.அன்வரும் விளையாடியிருந்தார்.
முஹத்தது அலியார் நவாஸ் அவர்கள் தற்போது இலங்கை தேசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தில் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராகவும் கடமை புரிகின்றார். இவரது இலட்சியங்களில் ஒன்று கிழக்கு பிராந்தியத்தில் கால்பந்தாட்ட விளையாட்டினை முன்னேற்றுவதாகும்.
தற்போது 57 வயதாகும் இவருக்கு மூன்று பிள்ளைகளும், மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -