கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, காத்தான்குடி நகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்களில் நடைமுறையுள்ள LGN வலையமைப்பின் இலத்திரனியல் உள்ளுராட்சி மன்ற திட்டத்தின் (eLG) ஊடாக Online மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் வருமானங்களை மேற்கொள்ளுவது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் திருகோணமலை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இத்திட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சோலைவரிக் கொடுப்பனவு Online மூலம் மேற்கொள்ளும் முறை, கொடுப்பனவு பெற்றுக் கொள்வது, எதிர்கொள்ளும் சவால்கள், இச்சேவையினை மேம்படுத்தும் பொருட்டு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்குதல், சேவையை மேம்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் குறைபாடுகள் போன்றனவற்றை கேட்டறிந்து கொண்டதுடன் இவ்வேலைத்திட்டம் எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் இலகுவான முறையில் விரைவாக சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இலத்திரனியல் உள்ளுராட்சி மன்ற வேலைத்திட்டத்தை மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் இதன்போது கூறிப்பிட்டார்.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், இலத்திரனியல் உள்ளுராட்சி மன்ற திட்டத்தின் திட்ட முகாமையாளர் சிவபிரசாந், காத்தன்குடி நகர சபையின் செயலாளர் திருமதி.எம்.ஆர்.எப்.றிப்கா, திருகோணமலை நகர சபையின் செயலாளர் தே.ஜெயவிஸ்ணு, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலத்திரனியல் உள்ளுராட்சி மன்ற திட்டத்தின் மூலம் சோலைவரிக் கொடுப்பனவுகளை Online மூலம் மேற்கொள்வது மற்றும் வருமானத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு இலத்திரனியல் உள்ளுராட்சி மன்ற திட்ட பொறியியலாளர் ரீ.தவநீதன் விளக்கமளித்தார்.