யாழ்ப்பாணம் முற்றவெளியில் தற்பொழுது நடைபெற்றுவரும் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கண்காட்சியில் கடந்த 3 தினங்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் கூடுதலான பாடசாலை மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். சலுகை வட்டியுடன் கூடிய கடன் திட்டத்தின் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இன்று 2 ஆயிரத்திற்கும் அதிமானோர் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள வங்கிக் கிளைகளின் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
விஷேடமாக ரன்-அஸ்வென்ன, கொவி நவோதய போன்ற விவசாயக் கடன் திட்டங்கள் மீது மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். விவசாய தொழிலை இயந்திர மயப்படுத்தும் நவீன தொழில் முயற்சிகள் தொடர்பிலான கடன் உதவி குறித்தும் பொரும்பாலானோர் ஆர்வம் செலுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களுக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கும் இலகுவாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷேட வேலைத்திட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 2 நாள் செயலமர்வு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன் போது கணவனை இழந்த குடும்ப பெண்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திட்டத்தை வகுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலான அரம்ப பயிற்சி வழங்கப்படவுள்ளது. 15 இலட்சம் ரூபா வரையான கடன் தொகையினை பிணையின்றி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும்.