அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சாய்ந்தமருதிலும் கல்முனையிலும் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரிப்பு என்ற கோரிக்கைகளானது அவரவரது பார்வையில் நியாயமானதாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. எனவே இம்மக்களது கோரிக்கைகள் காலம்தாழ்த்தப்படாது நிவர்த்தித்துக் கொடுக்கப்படவேண்டும்.
இதே போன்று ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், பல்வேறுபட்ட சங்கடங்களுக்கும், மனஉளைச்சலுக்கும் உள்ளாகியிருந்த நிலையில், இரண்டாவது பெருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
ஏப்ரல் 21 க்குப் பின்னர், புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடிய முஸ்லிம்களின் உள்ளங்களில் இன்னும் நிறைவான மன மகிழ்ச்சியும் உற்சாகமும் வராவிட்டாலும் கூட, இன்றைய நன் நாளில் எமது அனைவரின் உள்ளங்களும் வழமை போன்று சீராகி உள்ளத்தில் பூரிப்பு ஏற்பட, எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போமாக.
முஸ்லிம்களில் ஒரு சிலரினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலால், நாம் யாரும் அஞ்சி வாழ வேண்டிய அவசியமில்லை. இதற்காக, எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையுமில்லை. எல்லா சமூகங்களையும் போன்று நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
எமது கலை, கலாசாரம், அன்றாட சமய அனுஷ்டானங்கள் போன்றவற்றில், நாம் எப்பொழுதும் போல் உறுதியாய் இருக்க வேண்டும்.
இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளில் பொதிந்துள்ள தத்துவங்களையும், வரலாற்றுப் பின்னணிகளையும் நாம் ஒரு முறையேனும் எமது சிந்தனையில் எடுத்துக் கொள்ள வேண்டியதும், இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
எமது அத்தனை உரிமைகளும் மீண்டும் முழுமையாகக் கிடைப்பதற்கு, இந்நன் நாளில் எல்லாம் வல்லவனிடம் பிரார்த்திப்போமாக...! ஆமீன்...!
