கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை ஒருமாதகாலத்துள் பிரதேச செயலகமாக தரமுயர்த்தித்தருவேன் என்று வாக்குறுதியளித்த வண.ஞானசார தேரரின் காலஅவகாசம் நாளை(22)திங்கட்கிழமையுடன் நிறைவுக்குவருகின்றது. அதாவது அவ்வாக்குறுதி காற்றில் பறக்க இன்னும் ஒரேயொரு தினமே எஞ்சியிருக்கின்றது.
கடந்த மாதம் 17ஆம் திகதி மேற்படி கோரிக்கையை முன்வைத்து கல்முனையில்ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை 22ஆம் திகதி கல்முனைக்குவந்த பொதுபலசேனா செயலாளர்நாயகம் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் மேற்படி உறுதிமொழியை வழங்கி தண்ணீர்வழங்கி பிரீத் ஓதி நிறைவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன்படி அவரது ஒருமாதகாலம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற இன்னும்இன்னும் ஒரேயொரு தினமே எஞ்சியிருக்கின்றது.
அந்தஒருமாதகாலத்துள் அரசாங்கம் அதனைத்தரத் தவறினால் அவரே வந்து மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை கல்முனையில் ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதேவேளை வண.ஞானசார தேரர் கல்முனைக்கு வரும்வழியில் அம்பாறையில் எமது முஸ்லிம் எம்பிக்கள் பத்துப்பேரைச் சந்தித்துவிட்டு இன்றே உண்ணாவிரதத்தை முடித்துவைக்கிறேன் என்றுகூறி ஜனாதிபதியின் பிரதிநிதியாக வந்தவர். அவரைக்கதையைகேட்டு கல்முனைத்தமிழ்மக்கள் மடையர்களாகிவிட்டனர் என்று கடந்தவாரம் இடம்பெற்ற காரைதீவுப்பிரதேசசபையின் 17வது அமர்வில் உரையாற்றிய சபை உறுப்பினர்களான எம்.ஜலீல் மற்றும் எம்.றனீஸ் ஆகியோர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதுஎப்படியிருந்தபோதிலும் ஞானசார தேரரின் வாக்குறுதியை பெரிதும் நம்பி நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் கல்முனைவாழ் தமிழ்ச்சமுகத்திற்கு பலத்தஏமாற்றம் மட்டுமே எஞ்சப்போகிறது என கூறப்படுகிறது. அவரை நம்பி அழைத்துவந்தவர்களே இதற்கு பதிலளிக்கவேண்டுமென கல்முனைவாழ் தமிழ்அன்பர் ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதனிடையே நிரந்தர கணக்காளர் நியமனம் என்ற செய்தியையடுத்து பாராட்டு நன்றிகூறும் வரவேற்பு நிகழ்ச்சிகளும் பட்டாசுகொழுத்துதலும் நன்றிதெரிவித்தலும் கல்முனைதமிழ்மக்கள் மத்தியில் ஒருவிதஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

