இஸ்லாம் பாட ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் மௌலவிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இடப்பட்டிருப்பது உலமா கட்சியின் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்
எஸ்.அஷ்ரப்கான்-கல்வி அமைச்சினால் சமய ஆசிரியர்களுக்கென விடுக்கப்பட்டுள்ள வர்த்தமாணி அறிவித்தலில் இஸ்லாம் பாட ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் மௌலவிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இடப்பட்டிருப்பது உலமா கட்சியின் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மெளலவி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் சமய ஆசிரியர் நியமனத்தின் போது க பொ த உயர் தரத்தில் இஸ்லாம் பாடம் சித்தியடைந்திருந்தால் அவர் இஸ்லாம் பாட ஆசிரியராக நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால் மௌலவி அல்லாதவர்கள் சமய ஆசிரியர்களாகவும் சமய ஆசிரிய ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக மருதமுனையை சேர்ந்த மௌலவி ஒருவருக்கு கிடைக்க வேண்டிய ஆசிரிய ஆலோசகர் பதவி மௌலவி அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்ட போது அந்த மௌலவி இது பற்றி உலமா கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்த போது உலமா கட்சி இதனை அரசியல் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி வரை கொண்டு சென்றது.
அது மட்டுமல்லாமல் இது விடயத்தில் மிகவும் காரசாரமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
இவ்வாறு உயர் தரத்தில் இஸ்லாம் பாடம் சித்தியடைந்தவர்கள் இஸ்லாம் சமய ஆசிரியர்களாக நியமிக்கப்பட முடியும் என்பதற்கிணங்க சில இந்துக்களும் பௌத்தர்களும் கூட இஸ்லாம் சமய ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட கேலிக்கூத்துக்கெதிராக உலமா கட்சி மட்டுமே தொடர்ந்து பேசி வந்தது.
இது தவறு என மஹிந்த ராஜபக்ஷ அரசு ஏற்றுக்கொண்ட போதும் இந்த அரசில் உலமா கட்சியின் இக்கோரிக்கை ஏற்கப்பட்டு இஸ்லாம் சமய ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் மௌலவிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இட்டமைக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு உலமா கட்சி நன்றி சொல்லிக்கொள்கிறது.
அதே வேளை மேற்படி சமய பாட ஆசிரியர் நியனனத்துக்கான அறிவித்தலை பலரும் மௌலவி ஆசிரியர் நியமனத்துக்கான அறிவித்தல் என சொல்வது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கூட மௌலவி ஆசிரியர் நியமனம் என கூறும் அறியாமை கவலை தரும் விடயமாகும்.
மௌலவி ஆசிரிய நியமனம் வேறு இஸ்லாம் பாட சமய ஆசிரிய நியனனம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மௌலவி ஆசிரியர் என்பது பிரதானமாக அரபு மொழியையும் சமயத்தையும் கற்பிப்பவர்கள். கடந்த அரசில் 151 பேருக்கு இந்நியமனம் வழங்கப்பட்ட பின் இன்னமும் வழங்கப்படவில்லை.
எது எப்படியிருப்பினும் தற்போது சமய பாடத்துக்கென மௌலவிமார் நியமிக்கப்படுவதால் பாடசாலைகளில் இஸ்லாம் சமய பாட ஆசிரியர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர் பார்க்கிறோம். ஆனாலும் மௌலவி ஆசிரியருக்கான பாரிய வெற்றிடம் உள்ளது என்பதையும் அரசுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் சொல்லி வைக்கிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.