அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறானா ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவனின் சடலம் 22.08.2018 அன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபித் என்னும் குறித்த சிறுவன் 22.08.2018 அன்று மாலை 6 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
காணாமல் போன சிறுவனை தேடும் பொழுது சிறுவனின் செருப்பு ஆற்றுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆற்றுப்பகுதியில் உறவினர்களால் தேடும் பொழுது சிறுவன் விழுந்த தூரத்திலிருந்து அடித்துச் செல்லப்பட்டு 100 மீற்றர் தூரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக அட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின்னர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.


