பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு கல்வித்துறையில் ஏற்பட்ட பேரிழப்பு!


இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இரங்கல் 
பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்வின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு கல்வித்துறையில் ஏற்பட்ட பேரிழப்பாகும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மரணச் செய்தி மிகவும் கவலையளிக்கின்றது. எனது நீண்ட கால நண்பரான அவர் எனது அரசியல் பயணத்தில் பல சந்தர்ப்பங்களில் தேவையான ஆலோசனைகளையும் - ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளார்.
அவர் மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் மாகாண எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கி செயற்பட்டோம். மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மாகாண சபைகள் எல்லை நிர்ணய யோசனை அறிக்கையொன்றை நான் சமர்ப்பித்திருந்தேன். இதனை தயாரிப்பதற்கு ஆலோசனைகளையும் - வழிகாட்டுதல்களையும் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் வழங்கியிருந்தார்.
இதேவேளை, வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் ஆவணங்களை தயாரித்து அம்மக்களின் பிரச்சினையை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசம் வரை கொண்டு சென்றதில் இவருக்கு மிகப்பெரும் பங்குள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், அது சம்பந்தமான பிரச்சினைகள் எழும்போது முன்னின்று செயற்பட்டார்.
தான் பெற்ற கல்வி மூலம் சமூகத்துக்கு மிகப்பெரும் சேவையாற்றிய ஒருவர். பேராதனைப் பல்கலைக்கழத்தில் இவரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று உள்நாட்டிலும் - வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், அரசியல் நிலை தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்ந்த சிறந்த ஆய்வாளர், பன்னூலாசிரியர். இவ்வாறு சமூக உணர்வுள்ள ஒரு கல்விமானை நாங்கள் இன்று இழந்துள்ளோம். இது எமது சமூகத்துக்கு கல்வித்துறையில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
இவரது இழப்பால் கவலையுற்றுள்ள அன்னாராது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாராது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம். அத்துடன், எல்லா வல்ல இறைவன் அவருடைய தூய நோக்கத்தைப் பொருந்திக் கொண்டு அவருடைய பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்க்கையை இலகுபடுத்தி வைக்க பிரார்த்திக்கின்றேன். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -