இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே!
இன்று அரசாங்கக் கணக்குகளை மீளாய்வு செய்யும் பாராளுமன்றக் குழுவின் விவாத நேரம் எனக்கு கன்னியுரையைத் தந்து அது மாத்திரமல்லாமல் நான் சத்தியப் பிரமாணம் செய்கின்ற நேரம் என் மீது சில குற்றச் சாட்டுக்களை முன்வைத்தும் பேசியதற்கான என்னுடைய பதில்களை இந்த இடத்தில் வழங்குவதற்கு சந்தர்ப்பமளித்த கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய அரசியல் பிரவேசத்தினூடாக தேசியபட்டியலினூடாக இன்று இந்தப் பாராளுமன்றக் கதிரையை அலங்கரிப்பதற்காக வேண்டி என்னுடைய கட்சியின் தலைவர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கமையவும் அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் கௌரவ பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் சிபாரிசின் பேரிலும் இந்த பாராளுமன்ற அங்கத்துவத்தை தந்தமைக்காக அவர்கள் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்து அதேபோல் எனக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று எமது நாட்டைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிவடைந்து பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்ற இந்த வேளையில் மக்கள் இன்னும் பல்வேறுபட்ட பொருளாதார அதே போன்று உரிமைகள் சார்ந்த மற்றும் பல்வேறுவகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருப்பது என்னைப் பொறுத்தவரையில் வேதனையளிக்கின்றது.
இந்த நாட்டைப் பொறுத்தவரையில் 1960களில் ஆசியாவின் அதி உச்ச இடத்திலிருந்த ஒரு நாடாக இலங்கையைப் பார்த்தார்கள். ஆனால் இன்று இந்த நாடு பொருளாதார ரீதியாகவும் அதேபோன்று இனங்களுக்கிடையேயுள்ள இன விரிசல்களின் காரணமாகவும் இந்த நாட்டின் அபிவிருத்தி கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு காலகட்டத்தில் எங்களுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை நாங்கள் களைந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காக வேண்டியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக வேண்டியும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவே இந்த நாட்டை நாங்கள் பொருளாதார ரீதியாக பலம்மிக்க ஒரு நாடாகவும் அதேபோன்று இந்த நாட்டிலிருக்கின்ற ஏனைய பிரச்சினைகளுக்கு சரியான முடிவுகளைக்கட்டி இந்த நாட்டில் வாழுகின்ற நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் போல் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலையில் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம். அதற்காக வேண்டி என்னால் முடியுமான பங்களிப்பை இந்த சபையிலிருந்தவாறு குரல் கொடுக்க முடியும் என்ற வகையில் இந்த வாய்ப்பைத் தந்தமைக்கு நான் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று நாங்கள் அரசியல் ரீதியாகவும் எங்களுடைய உரிமைகள் ரீதியாகவும் பேசிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் எங்களுடைய அரசியல் அதிகாரங்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், உரிமைகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அதேபோன்று இந்த நாட்டிலிருக்கின்ற மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இந்நாட்டு மக்களிடம் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் அவர்களுடைய எதிர்பார்ப்பை நாங்கள் முடியுமான வரைக்கு இந்த உயர் சபையினூடாக அதனை நிறைவேற்றுவோமேயானால் இந்த நாட்டில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மாத்திரமல்லாமல் எதிர்காலத்தில இந்த நாட்டை வளப்படுத்தக் கூடிய எதிர்கால சந்ததியினருக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்குமென்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
நாங்கள் இன்று இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறுபட்ட பேதங்களைப் பேசிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் இந்த நாட்டை எதிர்காலத்தில் எவ்வாறு அபிவிருத்தியடையச் செய்யலாம் என்கின்ற கடமைப்பாடு இந்த சபையினருக்கு இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் இன்று நாட்டிலிருக்கின்ற 80 வீதத்துக்கும் அதிகமான சனத்தொகையினர் இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திலும் மீன்பிடியிலும் தங்களுடைய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களுடைய வாழ்வை வளப்படுத்தக் கூடிய சரியான ஒரு திட்டம் இல்லாத நிலையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆகவே இந்த அடிப்படையில் நாங்கள் எங்களுடைய அயல் நாடுகள் இன்று எங்களைவிட பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவிலிருந்த நாடுகள், குறிப்பாக ஆசியாவிலிருக்கின்ற சார்க் நாடுகளைப் பொறுத்தவரையில் பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள், அதேபோன்று தூர கிழக்கு நாடுகளான வியட்நாம், காவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளெல்லாம் இன்று பொருளாதார ரீதியாக எழுச்சியடைந்து வருகின்றார்கள்.
ஆகவே அவர்களைப்போன்று நாங்களும் எங்களுடைய எதிர்காலத் திட்டங்களை சரியான முறையில் வளப்படுத்தி எங்களுக்குள் இருக்கின்ற பேதங்களை மறந்து எங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தில் நாங்கள் கவனம் செலுத்துவோமேயானால் இந்நாடு ஒரு சுபீட்சம்மிக்க நாடாக மாறும். அது மாத்திரமல்லாது அநேகமான நாடுகளைப் பொறுத்தவரையில் சில கைத்தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டு கிராமத்துக்கொரு கைத்தொழில் அல்லது கிராமத்துக்கொரு வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் இந்நாடுகள் முடியுமான அரசாங்கத்தின் பங்களிப்பைச் செய்து அவர்களுடைய பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தாய்லாந்தை பொறுத்தவரையில் ஒரு கிராமம் அல்லது ஓரு பிரதேசத்துக்கு ஒரு கைத்தொழில் என்ற அடிப்படையில் இன்று அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் முடியுமான உதவிகளை அரசாங்கம் மாத்திரமல்லாமல் அரச பொறிமுறைகளினூடாக என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றதோ கம்பெனிகளை பதிவு செய்ய வேண்டுமாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய தொழில் துறைகளை ஒருங்கிணைக்க வேண்டுமாக இருந்தாலும் சரி அனைத்தையும் அரசாங்கம் இலகுபடுத்திக் கொடுத்து உள்நாட்டு முதலீட்டாளர்களை மாத்திரமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவழைத்து அந்த நாடுகளை அபிவிருத்தி செய்து கொண்டு போவதை எங்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆகவே அந்த அடிப்படையில் நாங்கள் எங்களுடைய பொருளாதாரத்தை வளர்ச்சியடைச் செய்யாவிட்டால் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியானதாக மாறிவிடும். மற்றும் இன்னுமொரு விடயத்தை நான் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். நான் சத்தியப் பிரமாணம் செய்தபோது என்மீது பல்கலைக்கழகத்தில் நான் உபவேந்தராக இருக்கின்றபோது எனது வீட்டுக்கு நீர்க்கட்டணமும், மின்சாரக் கட்டணமும் செலுத்தப்பட்டதாக இங்கு உரையாற்றிய உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
ஒரு உபவேந்தர் என்பவர் அவருக்குப் பல்வேறுபட்ட சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது. அது சட்டரீதியாக வழங்கப்பட்ட ஒன்று. அது மாத்திரமல்லாமல் பல்கலைக்கழகத்தின் மூதவையினூடாக அது வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த அனுமதியோடு பல்கலைக்கழகத்திலிருக்கின்ற எல்லா மட்டத்தினரின் அனுமதியோடுதான் எனக்கு அந்த சலுகைகள் வழங்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றது. தேவை ஏற்படின் கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு சமர்ப்பிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
அதுமாத்திரமல்லாமல் நான் கடமைபுரிந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்; பாலியல் இலஞ்சம் பெறுவதாக குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு பல்கலைக்கழகம் என்பது ஒரு நாட்டின் சொத்து. கல்வியின் முதுசமாக பார்க்கப்படுகின்றது. அங்கிருக்கின்ற பெண்கள், ஆண்கள் இன்று பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கின்றார்கள். எதுவாக இருந்தாலும் அது உண்மையிலேயே நிரூபிக்கப்பட்ட பின்பு இவ்வாறான சபையில் பேசியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்தமைக்கு இந்த சபைக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.