இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த இரவு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு குழுவினரால் அம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், ஹோட்டல் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டமை அந்த பிரதேசத்தில் பதற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ள இந்த நிலையில் விடயம் அறிந்த அமைச்சர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு பணித்தார்.
அத்தோடு இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் சட்டம் ஒழுங்குக்கான அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் தலைமையகம் போன்றவற்றுக்கும் தகவல்களை வழங்கி குறித்த பிரதேசத்தில் அமைதி நிலையை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறே குறித்த வேண்டத்தகாத இனவாத சம்பவத்துடன் தொடர்புபட்ட குழுவினரை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும், சிறுபான்மை சமூகத்தின் மீதான இவ்வாறான அடக்குமுறைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இன்றைய தினம் கூடவுள்ள அமைச்சரை கூட்டத்தில் அம்பாறையில் இடம்பெற்ற இந்த மனிதநேயமற்ற இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்ற இருப்பதோடு அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரையின் நிமித்தம் அம்பாரமாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் ஹரீஸ் , மன்சூர், நசீர் மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியஸ்தகர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நல்லிணக்கத்திக்கும்,சமாதானத்திற்கும் இவ்வாறான செயற்பாடுகள் குந்தகம் விளைவிக்கக்கூடியவை. சிறிய இனவாத குழுவின் இவ்வாறான செயற்பாடுகள் முழுநாட்டிலும் உள்ள முஸ்லிம்களை அச்சத்திற்குள் கொண்டுவரவல்லவை. எனவே இவற்றை உடனடியாக முறியடிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்பதனை பிரதமர்,ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு அமைச்சர் ஹக்கீம் கொண்டுவந்தார்.