இராணுவ சீருடையுடன் நின்று ஊடகவியலாளர்கள் சிலரை, விசாரணைக்கு உட்படுத்தியமை குறித்து முல்லைத்தீவு கட்டளைத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மறுத்துள்ளார். ஆகவே இராணுவ சீருடையில் நின்றவர்கள் இராணுவத்தினர் அல்ல. எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெறும் எனவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்த ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பிரதேசத்தில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக கடந்த சனிக்கிழமை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் எட்டுப் பேரை இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். அவர்கள் பயணித்த வாகனத்தையும் சோதனையிட்டனர்.
சுமார் அரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் வாகனம் ஒன்றில் அங்கு சென்றபோது, சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் முதலில் தங்களை விசாரணை செய்தாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார்.
விசாரணை செய்த இராணுவத்தினர் பின்னர் பொலிஸாரை அழைத்ததாகவும் அவர்களும் சிவில் உடையில் வந்து தங்களை விசாரணை செய்ததாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் என்பதால் ஆவா குழுவுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தியதாக சிவில் உடையில் நின்ற பொலிஸார் ஒருவர் சிரித்துக் கொண்டு கூறியதாகவும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த சம்வம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸாரும் கூறியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.IBC