ஏறாவூர் றிகாஸ்-
மட்டக்களப்பு- தொப்பிகல அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி 10 துவிச்சக்கர வண்டிகளில் ஏற்றிச்செல்லப்பட்ட 38 தேக்கு மரக்குற்றிகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் மோசடி தடுப்புக்குழுவினர் 10.12.2017 அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் பத்துப்பேரும் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடிவிட்டதாக பொலிஸார் கூறினர்.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவிற்கு பொதுமக்களிடமிருந்து வழங்கப்பட்ட இரகசியத்தகவலையடுத்து பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னவின் வழிகாட்டலில் மோசடி தடுப்புப்பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் டபிள்யு எம்ஜே. மதுசங்க தலைமையிலான குழுவினர் தொடுவில் சோலை முச்சந்தியில் பதுங்கியிருந்து இம்மரக்கடத்தலைத் தடுத்துள்ளனர். அத்துடன் இச்சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்திய சில சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம்மரக்குற்றிகள் எட்டு அடி நீளமும் இரண்டரை அடி சுற்றளவையும் கொண்டதாக காணப்பட்டன.
இவைகள் சட்டநடவடிக்கைக்காக கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
பொலிஸ் சார்ஜன்ட் ஆர்ஐபிஆர். ரத்னமலல (31332) , கொன்ஸ்டபிள்களான டிஎம்சி.சத்துரங்க (77837) , திலங்க (86800) , பீஜிஎஸ்டி. சாலிய (86003) மற்றும் எஸ்பீ.குமார (80845) ஆகியோர் இந்நடவடிக்கைக் குழுவில் அடங்கியிருந்தனர்.